பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/279

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

18

பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா சொன்ன

கள்ளன் புகுந்த கதை

"கேளாய், போஜனே! பெரும்பாலும் விமானத்திலேயே பிரயாணம் செய்துகொண்டிருந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர், ஒரு சமயம் ஏதோ ஒரு மாறுதலை உத்தேசித்து ரயிலியே பிரயாணம் செய்ய, அந்த ரயில் யாரோ ஒரு புண்ணியாத்மா நடுவழியில் செய்திருந்த நாசவேலை காரணமாக நடுக்காட்டிலே நிற்க, முழுத் தூக்கத்திலிருந்து அரைத் தூக்கத்துக்கு வந்த அவர் திடுக்கிட்டுச் சுற்று முற்றும் பார்ப்பாராயினர்.

இருட்டென்றால் இருட்டு; வெளியே ஒரே கும்மிருட்டு; 'ஙொய், ஙொய்' என்ற இனம் தெரியாத ஜீவராசிகளின் சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. அவருடன் அந்த முதல் வகுப்புப் பெட்டியில் பிரயாணம் செய்து வந்த ஓரிருவரும் அவருக்குத் தெரியாமல் எங்கேயோ இறங்கிச் சென்று விட்டிருந்தனர். தமக்குத் துணையாக அன்று என்னவோ அவர் சிட்டியையும் அழைத்துக்கொண்டு வரவில்லை; பாதாளத்தையும் அழைத்துக்கொண்டு வரவில்லை. 'தன்னந்தனியாக இப்படி வந்து அகப்பட்டுக் கொண்டோமே!’ என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தகாலை யாரோ ஒரு திருடன் மெல்ல வந்து அந்தப் பெட்டிக்குள் நுழைய, 'என்ன செய்வது, இவனை எப்படிச் சமாளிப்பது?' என்று ஒரு கணம் யோசித்த அவர் மறுகணம் சட்டென்று கண்ணை மூடிக்கொள்ள, 'ஆசாமி தூங்குகிறார்போல் இருக்கிறது!’ என்று