பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/307

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



304



27

இருபத்தேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மாலா சொன்ன

கல்லால் அடித்த கதை

"கேளாய், போஜனே! 'வம்பனூர், வம்பனூர்' என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘மாரி, மாரி' என்று ஒரு வள்ளல் உண்டு. அந்த வள்ளல் தம்மிடம் உதவி கோரி வருபவர்களுக்கெல்லாம் தம்மால் முடிந்த உதவியைத் தட்டாமல் செய்வதுண்டு. அங்ஙனம் செய்துவந்த அவரை அந்த ஊர் வம்பர்கள் போற்றாவிட்டாலும் தூற்றாமலாவது இருந்திருக்கலாம்; அதுதான் இல்லை. 'சும்மாவா செய்கிறான்? சுயநலத்துக்காகச் செய்கிறான்!' என்றனர் சிலர்; ‘ஒரு பக்கம் செய்கிற பாவத்துக்கு இன்னொரு பக்கம் புண்ணியத்தைத் தேடவேண்டுமோ இல்லையோ, அதற்காகச் செய்கிறான்!' என்றனர் இன்னும் சிலர்; 'புகழாசை யாரை விட்டது? வேறு வகையில் அடைய முடியாத அதை அவன் விலை கொடுத்து வாங்குகிறான்!' என்றனர் மற்றும் சிலர். இவற்றையெல்லாம் கேட்கக் கேட்க வள்ளலுக்கு ‘அழுவதா, சிரிப்பதா?' என்று தெரியவில்லை. ‘கொடுத்தால் நல்லவன்; கொடுக்காவிட்டால் கெட்டவன் என்பதல்லவா இந்த உலக நீதி? அந்த நீதிக்கு விரோதமாக அல்லவா இருக்கிறது இது!’ என்று அவர் வருந்தினார். அந்த வருத்தத்திலும் அவர் தம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்யாமல் இருந்தார் இல்லை. யார் என்ன சொன்னபோதிலும், 'என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்று மேலும் மேலும் செய்தே வருவாராயினர்.