பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


அவன் தலை மறைந்ததும் அடுக்களையில் ஒளித்து வைத்திருந்த ஏகாம்பரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்து, ‘இப்போதும் நீங்களும் 'திருடன், திருடன்' என்று கத்திக்கொண்டே அவரைத் தொடர்ந்து ஒடுங்கள்!’ என்று பிரேமா சொல்ல, ‘ஏன்?’ என்று அவன் ஒன்றும் புரியாமல் கேட்க, 'அதை அப்புறம் சொல்கிறேன்; இப்போது ஓடுங்கள், சீக்கிரம்!’ என்று அவள் அவனை விரட்ட, அவனும் ‘திருடன், திருடன்!' என்று கத்திக்கொண்டே அவனைத் தொடர்ந்து தெருவில் இறங்கி ஓடுவானாயினன்.

அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த போலீசாரில் ஒருவன், 'திருடன், திருடன் என்று கத்தி யாரை ஏமாற்றப் பார்க்கிறாய், திருடா!’ என்று பீதாம்பரத்தை மடக்கிப் பிடிக்க, 'ஐயையோ! நான் திருடன் இல்லை, ஐயா! வீட்டுக்காரன், சங்கிலியைப் பறி கொடுத்த வீட்டுக்காரன்! என்று அவன் பரிதாபமாக அலற, 'எந்தத் திருடன்தான் இப்போது தன்னைத் 'திருடன்' என்று ஒப்புக்கொள்கிறான்? எல்லோரும் தங்களை வீட்டுக்காரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். நட, ஸ்டேஷனுக்கு!' என்று அவர்களில் இன்னொருவன் அவன் கழுத்தில் கை வைத்துத் தள்ள, எங்கே சங்கிலி?' என்று மற்றொருவன் அவனைச் சோதித்துப் பார்த்து விட்டு, 'அதற்குள் டபாய்த்து விட்டாயா?' என்று அவன் கன்னத்தில் அறைய, அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு போலீஸ் லாரி பீதாம்பரத்தை ஏற்றிக்கொண்டு ஸ்டேஷனை நோக்கிப் பறக்கலாயிற்று.

அதைக் கண்டு அதிர்ந்துபோன ஏகாம்பரம், 'அதற்கு மேல் என்ன செய்வது?’ என்று தெரியாமல் அப்படியே அயர்ந்து போய் நிற்க, அவனைத் தொடர்ந்து வந்த பிரேமா, ‘சனியன் விட்டது; வாருங்கள், போவோம்!' என்று அவனை அழைத்துக்கொண்டு போய், அவனுடன் அன்றிரவை உல்லாசமாகவும் சல்லாபமாகவும் கழிப்பாளாயினள்!'