பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


இதை அறியாத கஸ்தூரி ஒரு கனவு கண்டாள். அந்தக் கனவில் காந்தி மகான் தோன்றி, 'அப்பாவி பெண்ணே! இம்முறையும் நீ ஏமாந்தாயா?' என்றார் தம் புகழ் பெற்ற பொக்கை வாய்ச் சிரிப்புடன்.

‘உங்கள் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு ஏமாற்றம் ஏது, தாத்தா? 'தீமை செய்பவனையும் நேசி!' என்று நீங்கள் உங்களுடைய வாழ்நாளெல்லாம் சொல்லவில்லையா? அந்த வழியைப் பின்பற்றி எனக்குத் தீமை செய்த என் கணவரை நான் மன்னித்து நேசித்தேன். அதற்காக என் அம்மாவிடம் ஒரு பொய்யையும் சொன்னேன். அதனால் அவர் திருந்தி, மறுபடியும் என்னைத் தேடி வந்தார். இதோ, நாளைக்கு அவர் என்னை அழைத்துக்கொண்டு பர்மாவுக்குப் போகப் போகிறார்!’ என்றாள் அவள், குதூகலத்துடன்.

காந்தி மகான் சிரித்தார்; ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டாள் கஸ்தூரி.

‘அசட்டுப் பெண்ணே! நான் ‘உண்மை வெல்லும்’ என்றுதானே சொன்னேன்? ‘பொய் வெல்லும்' என்று சொல்லவில்லையே!' என்றார் காந்திஜி.

தான் செய்த தவறு அப்போதுதான் தெரிந்தது அவளுக்கு. கண் விழித்துப் பார்த்தாள்; கணவனைக் காணோம்.

அடுத்தாற்போல் தான் அணிந்திருந்த நகை நட்டுக்களைப் பார்த்தாள்; அவனுடன் அவற்றையும் காணோம்!

“ஐயோ, மோசம் போனேனே!' என்று அவள் அலற, ‘என்னம்மா, என்ன நடந்தது!’ என்று கேட்டுக்கொண்டே அடுத்த அறையிலிருந்த அவள் தாய் விழுந்தடித்துக் கொண்டு அங்கே ஒடி வந்து கேட்க, அவளிடம் இம்முறை உண்மையைச் சொன்னாள் கஸ்தூரி. 'அதை இப்போது சொல்லி என்னடி, பிரயோசனம்? அப்போதே அல்லவா சொல்லியிருக்க வேண்டும்!' என்றாள் அவள்.