பக்கம்:முகவரிகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ட காட்சிகளையெல்லாம் நம் நெஞ்சில் நிறுத்திவிடுகிறார்.

மனித உழைப்பின் மாபெரும் அடையாளச் சின்னமாக நிற்கும் பக்ராநங்கலைப் பார்த்ததும் உரத்த குரலில் 'மனிதன் மனிதன் மனிதன்' என்று கூவுகிறார், மார்க்சிம் கார்க்கியாக மாறுகிறார். நாம் அங்கே பறந்து போக வேண்டும் என்று துடிக்கிறோம். பிறகுதான் சிறகில்லையே, என்ன செய்வது என்று சிந்திக்கிறோம்.

தாஜ்மகாலின் தனியழகில் மனம் சொக்கி நிற்கும்போது கூட இந்தக் காதல் மாளிகைக்காக எத்தனை பேர் ரத்தம் சொரிந்தனரோ என்று கேட்கிறார்; குருஷேவ் ஆகிறார்.

காஷ்மீரத்து இயற்கை அழகில் மட்டுமின்றி உழைக்கும் மக்களின் உடல் அழகிலும் தோழர் கிறங்கி விடுகிறார்.

'ஆண்கள் அனைவரும் மன்மதனின் மறுபதிப்புக்கள். பெண்கள் அனைவரும் ஊர்வசிகள்.'

தோழர், காளிதாசனைப்போல் கம்பனைப்போல் கவிஞராகப் பார்க்கிறார்.

காஷ்மீரத்தில் இயற்கை வளத்துக்குப் பஞ்சமில்லை; மனித உழைப்புக்கும் குறைவில்லை. எனினும் உழைப்புக்கும் அங்கே உரிய விலை இல்லை.

"உழைப்புக்குந் தகுந்த ஊதியம் கிடைக்குமா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள் இது பாரத புண்ய பூமி."

என்று கூறும்போது இக்பாலைப்போல் பாரதியைப் போல் புரட்சிக் கவிஞராகப் பார்க்கிறார்.

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/24&oldid=970621" இலிருந்து மீள்விக்கப்பட்டது