பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

35


மிருகங்களின் முகத்திலே பாவங்கள் ஏன் வெளிப் படவில்லையென்றால், அவைகளின் முகமானது, நீளமான தசைகளால் அமையப் பெற்றிருப்பதால்தான். நீளத் தசைகளில் நெகிழ்ச்சி இல்லாததும் ஒரு காரணமாகும்.

இப்படி 14 எலும்புகளாலும், 30 தசைத் துண்டுகளாலும் ஆக்கப்பட்டிருக்கும் முகத்திற்குப் போர்வைபோல அமைந்திருப்பது தான் தோல் ஆகும்.

தோலானது உடலின் உள்ளுறுப்புக்களைக் காக்கிற கவசம் போன்றது. முக அழகைப் பற்றி, நாம் தெரிந்து கொள்வதற்கு முன், தோல் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் நாம் கட்டாயம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

தோல்:

தோல் என்றாலே அழகு என்றுதான் அர்த்தம். இது எட்டு வகை வனப்பினுள் ஒன்று என்று மேம்படுத்திப் பேசுவாரும் உண்டு.

அற்புதமான ஐம்புலன்களில், தோலும் ஒன்று, உலகைப் பற்றிய உண்மைநிலையை உணர்ந்து கொள்ள உதவும் உன்னதமான அறிதற் கருவியாகும்.

உயிர் வாழ்கிற தடைவேலி (Living Barrier) என்று தோலினைப் புகழ்வார்கள். இது ஒரு அழகான காப்பு. மேலுறை (Leather Jacket) என்றும் கூறுவார்கள்.