பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


பெற்ற பாராட்டுகள்

பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக் கவிஞர், கவி மாமன்னர், கவிச்சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர். கவிதை இமயம். தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்த் தேசியக் கவிஞர், தமிழ்க் குடியரசின் கவிமுடியரசர், கவியுலக முடியரசர். தன்மானக் கவிஞர், தமிழசைப் பாவலர், மரபின் மைந்தர்.

வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், வாய்மைச் சொல்லினர். சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர், திமிர்ந்த ஞானச்செருக்குடைய சங்கப் புலவரனையர், சங்கத்தமிழனைய தூயவர், பீடுநடையினர், பெருமித வாழ்வினர், நிமிர்ந்த நன்னடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப்பிழையார், ஆர்த்தவாழ்வினர். ஒட்டார் பின் செல்லாதவர். நல்லாசிரியர், ஆசான் போற்றுபவர், நன்றி மறவாதவர், நட்புப்பெரிதென வாழ்ந்தவர். பகுத்தறிவாளர், மனிதநேயர். பழகுதற்கினிய பண்பாளர், பிறர்க்குதவும் ஏந்தல், சாதி தொலைத்தவர், சமயம் கடந்தவர், பதவி வெறுத்தவர், சமத்துவம் விரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர், புகழ்கண்டு கூசுவார், அன்பு நெஞ்சினர். குழந்தை உள்ளத்தினர். பூமனத்தினர், இனிமைப் பேச்சினர், இளமை விரும்பி, அமைதி வாழ்வினர், குறிக்கோள் வாழ்வினர்.

இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல், தடம்புரளாத் தங்கமாக, தன்மானச் சிங்கமாக, தமிழ் வேழமாக, கொள்கைக் குன்றமாக வாழ்ந்தவர். பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமலும், அரசவைப் பதவிகள் நாடி வந்தபோதும் அவற்றைப் புறக்கணித்தும் 'வளையா முடியரசர்' என்றும், வணங்கா முடியரசர் என்றும் புகழ்பெற்றவர். தன்மானக் கொள்கையால் மைய, மாநில அரசின் அரிய பல விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் வீறும், வேட்கையும் பெறச் செய்தவர் கனவிலும் கவிதை பாடுபவர். பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனைத் தந்தையாகவும் கருதிக் குலமுறை கிளத்தும் கொள்கையுடையவர்.

தம் வாழ்நாளில் இறுதியாக அவர் இயற்றிய கவிதை :–

வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்
கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ்
நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே
ஆளாதல் திண்ண ம் அடியேன் நினது மலரடிக்கே.