பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49


26. நானொரு குழந்தை


குடும்பம் எனக்கோர் நடைவண்டி - நல்ல
          கொள்கை வெறிதான் தொடர்வண்டி
இடும்பை தவிர்த்திடும் முப்பாலே - என்னை
          இனிதே வளர்த்திடும் தாய்ப்பாலாம்.

ஆயும் மொழியே சிறுகோலி - அதனை
          அறிவால் தெறிப்பேன் குழிகோலி
பாயும் குழியோ கவியாகும் - ஆடல்
          பார்த்து மகிழ்வது புவியாகும்.

பாமலர் என்றன் மழலைமொழி - பாட்டில்
          பாவும் பொருளே குவளைவிழி
மாமழை வானந் தவழும்வழி - அங்கே
          மதியம் உருள்பந் தெனதுவழி.

காவியம் என்றன் மணல்வீடு - பொங்கும்
          கற்பனை யதுதான் சிறுசோறு
வாவினி அம்மா மகிழ்வோடு - நெஞ்சின்
          வாழை விரிப்பேன் பரிவோடு.

உலகின் நிலையே தெரியவிலை - அங்கே
          உண்மையும் பொய்யும் புரியவிலை
அலகில் விளையாட் டாடிவேன் - என்னோ
          டாரும் வரவிலை கூடிடவே.