இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49
குடும்பம் எனக்கோர் நடைவண்டி - நல்ல
கொள்கை வெறிதான் தொடர்வண்டி
இடும்பை தவிர்த்திடும் முப்பாலே - என்னை
இனிதே வளர்த்திடும் தாய்ப்பாலாம்.
ஆயும் மொழியே சிறுகோலி - அதனை
அறிவால் தெறிப்பேன் குழிகோலி
பாயும் குழியோ கவியாகும் - ஆடல்
பார்த்து மகிழ்வது புவியாகும்.
பாமலர் என்றன் மழலைமொழி - பாட்டில்
பாவும் பொருளே குவளைவிழி
மாமழை வானந் தவழும்வழி - அங்கே
மதியம் உருள்பந் தெனதுவழி.
காவியம் என்றன் மணல்வீடு - பொங்கும்
கற்பனை யதுதான் சிறுசோறு
வாவினி அம்மா மகிழ்வோடு - நெஞ்சின்
வாழை விரிப்பேன் பரிவோடு.
உலகின் நிலையே தெரியவிலை - அங்கே
உண்மையும் பொய்யும் புரியவிலை
அலகில் விளையாட் டாடிவேன் - என்னோ
டாரும் வரவிலை கூடிடவே.