பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


44. தமிழ் – என் மகன்


பிள்ளைக் கலிதனைத் தீர்க்கவந்தாய் - அன்புப்
பெட்டக மேஇன்பம் சேர்க்க வந்தாய்
உள்ளக் கவலைகள் ஓட்டவந்தாய் என்றன்
ஒவிய மேபுகழ்க் காவியமே

கொஞ்சுங் கனியிதழ் நீதிறந்தால் - உள்ளம்
கொள்ளைகொள் ளுங்களி கூடுதடா
விஞ்சு நலந்தரு யாழுடனே - குழல்
வேண்டுகி லேன்தமிழ் மாமகனே

பைந்தளிர் மேனியைத் தீண்டுகையில் - தமிழ்ப்
பாலக னேநடை காணுகையில்
பைந்தமி ழேஎன நின்பெயரைச் - சொல்லிப்
பாடிப் புகழ்ந்துனைப் பேசுகையில்

நின்மொழி என்செவி சேருகையில் - நெஞ்சில்
நேரும் மகிழ்வினை யாதுரைப்பேன்
என்னுயிர் மூச்சென ஆனவனே - எனக்
கேதுக்கடா அந்த மேலுலகம்

வீதி களில்விளை யாடுகையில் - என்றன்
வேதனை யாவுமே ஓடிடினும்
தீது புகுந்து விளைந்திடுமோ - என்று
செந்தமி ழேமனம் அஞ்சுகிறேன்

கெட்ட மொழியினைப் பேசுவது - மிகக்
கேடு தருஞ்செயல் விட்டுவிடு
சிட்டு நிகர்த்திடும் என்மகனே - வரும்
சின்ன மொழியையும் தள்ளிவிடு