பக்கம்:முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. நல்கூர்தலாகக் (வறியதாகக்) கூறும் பத்துக் கருத்துகள்

  1. கடல் சூழ்ந்த உலகில், மக்களை ஆளும் அரசன் செங்கோல் முறை தவறின், அவன் ஆளும் நாடு நல்கூர்ந்ததாகும் - வறுமை உடையதாகும்.
  2. மிகவும் அகவை (வயது) முதிர்ந்தவன் காமத்தை விரும்புதல் - அதாவது மேலும் புதிதாகத் திருமணம் செய்து கொள்ள விரும்புதல் பயனற்றதாகும்.
  3. உடன் இருந்து கொண்டே உள்ளத்தில் பகை கொண்டு செயலாற்றுபவனுடன் சேர்ந்திருத்தல் வறிதானதே - வீணானதே.
  4. பெரிய பிணியாளி பெறுகின்ற இன்பம் என்பது, உண்மையான பயன் உடையதாகாது.
  5. தன்னைப் பொருட்படுத்தாது புறக்கணிப்பவரிடத்தில் சினம் கொள்வது செல்லாது - பயனற்றது.
  6. மிகவும் அகவை முதிர்ந்த மூத்தோன் தன்னை ஆடையணிகலன்களால் ஒப்பனை (அலங்காரம்) செய்து கொள்வது அவ்வளவாக எடுபடாது.
  7. தனது பேச்சு எடுபடாத இடத்தில் பேசுதல் என்பது பயனற்ற வீண் செயலாகும்.
  8. உள்ளத்தில் குளிர்ச்சியின்றி வறட்சியுற்றிருப்பவனோடு - அதாவது - உள்ளன்பு இல்லாதவனோடு சேர்ந்திருத்தல் பயன் தராததாகும்.
  9. தமது பெருமையைக் கண்டு அஞ்சி மதிப்புக் கொடாத இடத்தில் சினம் காட்டுதலால் பயனில்லை.
  10. உண்மையான நட்பு இல்லாதவரிடத்தில் இன் சொல்லையோ - ஓர் உதவியையோ பெற உள்ளத்தில் விரும்பிச் செல்லுதலால் ஒரு பயனும் இராது.

21