பக்கம்:முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நூல் அறிமுகம்

கழக (சங்ககால) இலக்கியங்களுள், பெரிய அளவுள்ள பாடல்களைக் கொண்ட பதினெட்டு நூல்கள், பதினெண் மேற்கணக்கு எனவும், சிறிய அளவுள்ள பாடல்களைக் கொண்ட பதினெட்டு நூல்கள், பதினெண் கீழ்க் கணக்கு எனவும் வழங்கப் பெறும். கணக்கு என்றால் நூல். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் முது மொழிக் காஞ்சி என்னும் இந்த நூலும் ஒன்றாகும். இதனை இயற்றியவர். மதுரைக் கூடலூர்க் கிழார் என்னும் கழகப் புலவர் பெருமானாவார்.

முது மொழிக் காஞ்சியாவது: எல்லோரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம் பொருள் இன்பத்தை அறியச் சொல்வது முது மொழிக் காஞ்சியாகும். இப்பெயரைத் தாங்கிய இந்நூலுள் பத்துப் பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்திலும் தனித் தனிக் குறள் தாழிசைகள் பத்து இருக்கும். முதல் பாடல் இரண்டடி கொண்டதாகவும் மற்றவை ஒரடியாகவும் இருக்கும். முதல் பாடல்களில் உள்ள "ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்" என்னும் முதல் அடியைப் பின்னுள்ள ஒன்பது அடிகளோடும் சேர்த்துப் பொருள் கொள்ளல் வேண்டும்.

இந்நூலுள் பரிந்துரைக்கப்பட்டுள்ள முதுமொழிகளை வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகின், வீடும் திருந்தும் - நாடும் திருந்தும் - மக்களினம் உயர்வடையும்.


புதுச்சேரி-11

சுந்தர சண்முகன்