இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. தந்தையும் மகனும்:
தோழனுடன் டில்லியெனும்
தொன்னகரம் சென்றான்;
வேழமதை வெல்லுமொரு
சிங்கமென நின்றான்.
1
சிறையிருக்கும் தந்தையினைச்
சிறுவனவன் கண்டான் ;
முறைமையினால் முடிவணங்கிப்
பணிவுமிகக் கொண்டான்.
2
“தந்தையுமைச் சிறைவிடுக்கத்
தநயன்இதோ வந்தேன் ;
சிந்தைமகிழ் கொள்ளவரம்
தந்தருளும் உய்ந்தேன்.”
3
பிள்ளை முகம் பார்த்தபிதா
பேருவகை யுற்றார்;
வெள்ளமெனப் பொங்கிஎழும்
வேட்கைமொழி சொற்றார்.
4
“தவமகனே, நின் குணத்தின்
தன்மையது நன்றே!
குவலயத்தோர்க் கடங்கிவிடும்
குதிரைஇது அன்றே!
5
சிலதினமே சிறைவாசம்
செய்குவன்நான் மகனே!
நலமுடனே சென்றிடுவாய்
நாட்டினுக்கே உடனே.”
6
57