பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூறுமுறை சாவதற்குத் தண்டித் தாலும் நும்முள்ளம் எனையின்று மன்னித் தாலும் வேறுதொழில் நான்செய்யப் போவ தில்லை. வேங்கையைப்போய் வரிக்கோட்டை மாற்றிக்கொள்ளக் கூறுகின்றீர் நடைபெறுமா? உயிரின் மேலாம் கொள்கையினை நான்துறக்க மாட்டேன்; பாயும் ஆறுகளும் திசைமாறும்; ஆனால் இந்த அறிஞனென்றும் திசைமாறப் போவ தில்லை. நதிவீதி சந்திக்குமுச் சந்தி ஏறி நாவீரம் காட்டிப்பல் கூட்டம் கூட்டி 'விதியில்லை; வெவ்வேறு கடவு ளில்லை; விண்ணியலும் மண்ணியலும் அறிதல் வேண்டும்; அதிகார அரசியல்தான் அற்பர் வீடு; ஆணவத்தின் மறுபதிப்பே கொடுங்கோல் ஆட்சி; புதுப்பாதை காட்டுகிறேன்; அறிவைத் தேடிப் புறப்படுங்கள்!' என்றுசொல்லத் தயங்கமாட்டேன். தேர்ப்போட்டி நடத்துகிறீர்; துருத்தி மூக்கில் திணறுகின்ற நுரைமூச்சு விட்ட வண்ணம் ஆர்த்துவரும் குதிரைதரும் வெற்றிக் காசு அதையோட்டி வருபவனைப் போற்று கின்றீர். தார்க்குச்சி இல்லாமல் உம்மை யெல்லாம் தன்மானப் பாதைக்குச் செலுத்தும் என்னைத் தீர்த்துவிட நினைக்கின்றீர், பளிங்குக் கல்லால் தெருத்தோறும் சிலையெடுத்துப் போற்றி டாமல்! முருகுசுந்தரம் கவிதைகள் 267