இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆடும் தரையோடும்—மெத்தை
அடுக் கொடிந்தனவாம்!
கூடத்து மக்களெலாம்—எழிற்
கொஞ்சிப் பழம்போலே,
வாட நசுங்கின ராம்—ரத்த
வாடை எடுத்ததுவாம்!
பெற்ற குழந்தைகளைத்—தினம்
பேணிவரும் தாய்மார்,
சிற்றெறும்புக் கடிக்கே—அழும்
திவ்ய அன்புடையார்!
வெற்றிக் குவட்டாவை—இயற்கை
வேரறுக்கும் சமயம்
பெற்ற பிள்ளை துடிப்பும்—பிள்ளை
பேணும் அன்னை துடிப்பும்,
எண்ணச் சகிக்கவில்லை!—நகர்
எங்கும் சுடுகாடாம்!
கண்டவர் செத்திருப்பார்—இந்தக்
கஷ்ட நிஷ்டூரமெலாம்!
அண்டை அயலிருப்பார்—அவர்
அன்பினிற் செத்திருப்பார்!
எண்டிசை கேட்டிருக்கும்—இதை!
ஏக்கம் அடைந்திருக்கும்
இன்றிரவே நமது—நிலைமை
ஏதுகொல் என்றெண்ணும்
தின்றுபடுக்கு முனம்—உயிர்
தீரும்என நடுங்கும்!
14