2
தமிழகத்தில் அரபிகள்
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம், மனித சமுதாயத்தின் வளர்ச்சியிலே ஒரு புதிய திருப்பத்தை தோற்றுவித்தது. தெளிந்த, உயர்ந்த, தெய்வீக சிந்தனைகளின் கருவூலமாக, இஸ்லாம் என்ற மாபெரும் மறைவழியை, மனித இனம், மணி விளக்காகக் கண்டது. அன்பையும் அறத்தையும் ஆதாரங்களாகக் கொண்ட திருமறையையும் அண்ணல் நபிகள் அவர்களது ஆன்மநேயக் கருத்துக்களையும், அவர்களது ஆரவாரமற்ற நடைமுறைகளையும், தங்களது வாழ்க்கை நெறிகளாகப் பற்றிப்பிடித்த அரபிகள், கீழ்நாடுகளுக்கு வளமையாகச் செல்லும் வணிகர்களாக மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு இன்றியமையாத புதுவழியாகிய இஸ்லாத்தைப் பரப்பும் இறை நேசர்களாகவும் சென்றனர்.
இன்றைய இந்திய துணைக் கண்டத்தின் கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும், இலங்கை, மலேஷியா, இந்தோனிசியா, சீனம், ஜப்பான், புரூணை, போர்னியா, பிஜி, பிலிப்பைன்ஸ் ஆகிய கீழ்நாடுகள் அனைத்திலும், இன்று மக்கள் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களாக இருப்பதற்கு, அங்கு சென்ற அரபிய நாட்டு வணிகர்களும் தொண்டர்களும் தான் காரணம் என்பதை வரலாற்றுச் செய்திகள் விளம்புகின்றன. இந்த நாடுகளின் காடுகளிலும், மலைகளிலும் கடலோரங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான அராபிய இறை நேசர்களின் அடக்கவிடங்கள் (மக்பராக்கள்) இந்த உண்மையை என்றும் நினைவூட்டுனவாக உள்ளன. குறிப்பாக, அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது நெருங்கிய தோழர்களான தமீம்-உல்-அன்சாரி, முகம்மது உக்காசா, ஆகியவர்களது இறுதி