பெரிய மாயன் பொட்டல்
மங்கலக்குறிஞ்சி ஊரைச் சுற்றி அழகிய மலைத்தொடர்களும் பச்சைப்பசேரெனத் தோன்றிய வயல் வெளிகளும் சோலைகளும் பழத் தோட்டங்களும் நிறைய இருந்தன. ஆனால், இவற்றையெல்லாம்விட ஊருக்குக் கிழக்கேமலையடி வாரத்தில் வெட்ட வெளியாய்த் தோன்றிய அந்தச் சின்னஞ் சிறு பொட்டல்தான் என் மனத்தை அதிகமாகக் கவர்ந்தது.
இதனால் என்னுடைய ரஸிகத்தன்மையைப் பற்றி நேயர்கள் சந்தேகிக்க வேண்டாம். இயற்கை அழகின் நடுவே திருஷ்டி கழித்தது போலச் சூனியமாய் நின்ற அந்தப் பொட்டலின் பெயரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்ட கதையும்தான் என் மனத்தைக் கவர்வதற்குக் காரணமாக இருந்தன.
வெள்ளை நிறத்தில் உவர்மண் பரப்பாகப் பரந்து கிடந்த அந்தப் பொட்டலில் புல், பூண்டு கூட முளைப்பதில்லை. முதன் முதலாக நான் மங்கலக்குறிஞ்சிக்குப் போனபோது அந்தப் பொட்டலைப்பற்றி அவ்வூர்வாசி ஒருவரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.
அவர், அதற்குப் பெயர் ‘பெரிய மாயன் பொட்டல்’ என்று எனக்குக் கூறினார். அந்தப் பெயர் என் மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கிற்று.
“இவ்வளவு அழகான ஊரில் மலைச் சிகரங்களுக்கும், மரகதப் பசும் பாய்களை விரித்தாற் போன்ற வயல் வெளிகளுக்கும் இடையே இந்தப் பொட்டல் விகாரமாக இருக்கின்றதே? இதில் ஏதாவது மரம், செடி, கொடிகளை,