பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்
227
தாசில்:- நான் போகும்போதே தந்தியாபீசிற்குப் போய் இம்மாதிரி தந்தி வந்திருப்பதாக அறிந்துகொண்டேன். பிறகு அவரிடம் போனேன். ஆனால், ஏன் அவரிடம் போனேன் ஆய்விட்டது. அவர் இவ்வளவு கெட்ட மனிதரென்று நான் இன்று தான் கண்டேன். இத்தனை நாளாக அவர் எங்களைத் தாறுமாறாக வைவது வழக்கம்; இன்று ரஜா கொடுக்கவில்லை யென்று அவர் துரையவர்களையும், துரைசானி யம்மாளையும் வைத வசவுகளை வாயாற் சொல்ல முடியாது. எனக்கு வந்த ஆத்திரத்தில் வேறு யாராவது மனிதனா யிருந்தால், காலில் கிடந்ததை எடுத்தே அடித்திருப்பேன்? என்னடா மேலதிகாரியைப் பற்றி இப்படிச் சொல்லுகிறனே என்று துரையவர்கள் நினைக்கப்படாது. அவர் தங்களைத் தூவித்தது அவ்வளவு அசங்கியமாக இருந்தது.
துரை:- (மிகவும் ஆத்திரமாக) என்னவென்று திட்டினார்.
தாசில்:- தயவு செய்து மன்னிக்க வேண்டும். நான் சொன்னால் துரையவர்களுக்கு வருங்கோபத்தில், என்னைக் கூட அடித்துவிடுவீர்கள்.
துரை:- அவர் சொன்னதற்காக உம்மிடம் கோபிப்பதேன், பாதகமில்லை; சொல்லும்.
தாசில்:- (மிகவும் தயங்கி) தாங்கள் அம்பட்டனுடைய பிள்ளையாம்; சின்ன ஜாதிப் பயலாம்; அற்பத்தனம் உள்ளவர்களாம் குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்த மாதிரி உங்களிடம் இந்த ஜில்லாவை ஒப்புவித்து விட்டார்களாம். தாங்கள் சென்ற வருஷம் நீண்டகால ரஜாவின் மேல் சீமைக்குப் போயிருந்த காலத்தில் வெங்கம்பட்டி வாண்டையார் உங்களை சீமையில் பார்த்தாராம்; அப்போது நீங்கள் உங்களுடைய அப்பனுக்குத் தலை சிரைத்துக் கொண்டிருந்தீர்களாம். உங்கள் வீடு, குப்பைத் தொட்டி போலிருந்ததாம். அவரை உட்காரவைக்க இடங்கூட