பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்
229
தாசில்:- இது சாதாரணமாக உலகத்தில் நடக்கக்கூடிய விஷயமாயிருந்தால் எளிதில் விளங்கியிருக்கும். இது அசாதாரணமான காரியம்; வேறு எங்கும் நடக்காத அநியாயம். சேவகர்கள் இதைப்பற்றி மிகவும் இழிவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்; அப்போது அவர்கள் சொன்னதை நம்பாமல், அவர்களைக் கண்டித்தேன். அது இப்போது நிஜமாய்ப்போய்விட்டது; இந்த மனிதர் எவ்விதமான பஞ்சமா பாதகங்களுக்கும் துணிந்தவராக இருக்கிறார். இப்பேர்ப்பட்ட மனிதர்களாலேயே பிராம்மண ஜாதிக்கு ஒரு இழிவு உண்டாய்விட்டது. இதைச் சொல்ல வாய் கூசுகிறது.
துரை:- (ஏளனமாக) இந்தப் பெரிய மனிதருடைய யோக்கியதையைச் சொன்னதுதான் சொன்னீர் முழுவதும் சொல்லும்; கேட்டு சந்தோஷப்படுவோம். பெண் இப்போது இங்கேதானே இருக்கிறாள்?
தாசில்:- பெண்ணை நான் பார்க்க முடியவில்லை. சேவகர்களிடம் விசாரித்தேன், அவர்கள் பெண் இங்கே வரவில்லை யென்று சொல்லுகிறார்கள். உண்மையான விஷயத்தை உங்களுக்குச் சொல்லத் தடையொன்றுமில்லை. இந்தப் பெண் அபூர்வமான அழகுடையவளாம். அவருக்கு இவள் ஒரே குழந்தை. ஆதாலால், இவளை விடுத்து அவர் ஒருநிமிஷங்கூட பிரிகிறதில்லையாம்; இரண்டு வயது முதல் இவர் அவளைத் தம்முடைய படுக்கையிலேயே விடுத்துக் கொண்டு படுத்துக்கொள்வது வழக்கமாம்; இவள் இரண்டு வருஷத்திற்கு முன் புஷ்பவதி யானாளாம்; புஷ்பவதியான பிறகும் இவர் அப்படியே செய்துவந்தாராம். ஒரு வருஷமான பிறகு புருஷன் வீட்டார் பெண்ணை அனுப்பும்படி கேட்டார்களாம். மருமகன் இங்கேயே வந்திருந்து வக்கீல் வேலை செய்யட்டும் என்று இவர் சொல்லிவிட்டாராம்; பிறகு இவருடைய தாய் மனைவி அண்டை அயலார் முதலியோரின் தொல்லைக்குப் பயந்து, பெண்ணை புருஷன் வீட்டுக்கு அனுப்பினாராம். பெண் அங்கு சென்று ஐந்தாறு மாசங்கள்