302
மேனகா
17 வது அதிகாரம்
அணங்கோ ? ஆய்மயிலோ ?
மூர்ச்சையடைந்து இரவு பன்னிரெண்டு மணிக்குக் கீழே வீழ்ந்த மேனகா மறுநாட் காலை எட்டு மணிக்கே தனது உணர்வை ஒரு சிறிது பெற்றாள். அவ்வளவு நீண்ட நேரம் வரையில், அவளது தேகம் உணர்வற்று, உயிர்ப்பற்று, அசைவற்று, ஒய்ந்து, ஜடத்தன்மை யடைந்து இவ்வுலகையும், தன்னையும் மறந்து சவம் போலக் கிடந்தது. அவளது ஜீவனோ மண்ணிலு மின்றி விண்ணிலுமின்றி அந்தத் தேகத்தை விட்டுப் பிரிந்ததோ பிரியவில்லையோ வென்னும் சந்தேக நிலைமை யில் எவ்விடத்திலோ மறைந்து கிடந்தது.
மெல்லிய மலர்கள் மூக்கிற்கருகில் வருதலால் வாடிக்குழைந்து போதலைப்போல உத்தம ஜாதிப் பெண்களின் மனதும் தேகமும் காமாதுாரரது சொல்லால் குழைந்து கருகிப்போகுமல்லவா! அவ்வாறே மேனகா வென்னும் மெல்லியலாள் எதிர்பாராத பெருத்த விபத்திற் பட்டு அன்றிரவில் நெடுநேரம்வரையில் நைனா முகம்மது மரக்காயனுடன் போராடவே, அவளது மனதும் மெய்யும் அளவுகடந்து அலட்டப்பட்டு நெகிழ்ந்து போயின. உயிரிலும் அரியதான தனது கற்பை, அந்தக் கள்வன் அபகரித்து விடுவானோவென்ற சகிக்கவொண்ணா அச்சமும் பேராவலும் பொங்கியெழுந்து அவளை வளைத்துக் கொண்டன. கணவனது சுகத்தைப் பெறாமல் நெடிய காலமாய் பெருந்துன்பம் அநுபவித்து அலமாந்து கிடந்த தன்னைத் தனது ஆருயிர்க் கணவன் கடைசியாக வரவழைத்து ஒப்பற்ற அன்பைக் காட்டி இன்பக்கடலிலாட்டிய காலத்தில், அதை ஒரு நொடியில் இழந்துவிட நேர்ந்ததைக் குறித்துப் பெரிதும் ஏங்கினாள். தனது