அணங்கோ ? ஆய்மயிலோ ?
303
பிராணநாதனை இனி காணல் கூடுமோ கூடாமற் போகுமோ வென்ற பெருந்துயரமும் பேரச்சமும் உரமாக எழுந்து வதைத்தன. நைனா முகம்மதுவின் காமாதுரமான தோற்றமும் மோகாவேசக் குறிகளும் வரம்பு கடந்த கன்னகடூரமான சொல்லம்புகளும் பசுமரத்தாணிபோல அவளது உள்ளத்தில் தைத்து ஊடுருவிப் பாய்ந்து அதை சல்லடைக் கண்ணாய்த் துளைத்துப் புண்படுத்திய தாதலின், தத்தளித்து மயங்கி தற்கொலை புரிந்து கொள்ள வெண்ணி, தனது மெல்லிய இயற்கைக்கு மாறாக மிகவும் வற்புறுத்தி வலுவையும் மனோ உறுதியையும் வருவித்துத் தனது தேகத்திற்கும் மனதிற்கும் ஊட்டி, விண்ணென்று சுருதி கூட்டப்பட்ட வீணையைப்போல இருந்த தருணத்தில் தந்தியருதலைப்போல, அவளது கரத்திலிருந்த கத்தியை யாரோ பிடுங்கிக்கொள்ளவே அவளது வீராவேசமும், மனதின் உரமும், உறுதியும் ஒரு நொடியில் உடைந்து போகும் நீர்க்குமிழியைப்போல, இருந்தவிடந்தெரியாமற் போகவே, அவளுடைய அங்கம் முற்றிலும் தளர்வடைந்து நிலை தடுமாறிப்போனது. தனது கத்தியைப் பிடுங்கினவன் அந்த மகம்மதியனே யென்னும் அச்சமும், இனி தனது கற்பு நிலையாதென்னும் அச்சமும் பெரும் பேய் அறைதலைப் போல, அவளுடைய மனத்தைத் தாக்கவே, அவளது மூளையும், அறிவும் சிதறிப்போயின. சிரம் கிருகிரென்று சுழன்றது. ஒரு விநாடிக்குள் அவள் வேரற்ற மரம்போலக் கீழே படேரென்று வீழ்ந்து மூர்ச்சித்தாள். முகம் வெளுத்துப் பிணக்களை பெற்றது. நித்திரைக்கு அப்பாலும் மரணத்திற்கு இப்பாலுமான இருண்ட நிலைமையில் நெடுநேரம் வரையில் அவளது உணர்வு ஆழ்ந்து கிடந்தது.
மேற்கூறப்பட்டபடி மறுநாட்காலை எட்டு மணிக்கே பூந்தோடுகள் போன்ற அவளது அழகிய இமைகள் சிறிது விலகின. வெளுத்திருந்த வதனத்தில் இரத்த ஓட்டம் காணப்பட, ரோஜா இதழின் நிறம் தலை காட்டியது. ஆனால், அவளது விழிகள் தமது தொழிலைச் செய்யாமல் வெறும் விழிகளாயிருந்தன. வெளியிலிருந்த எந்தப் பொருளையும் அவ்விழிகள் உட்புறத்திற்குக் காட்டவில்லை. ஆனால்,