54
மேனகா
ஒளி ஜ்வலித்தது. தான் அங்கு மிங்கும் சென்ற தருணங்களில் தனது மணாளன் தன்னை ஒளிமறைவாய்க் கடைக்கணித்துப் புன்முறுவல் செய்ததைக் காண, அவள் பெருமகிழ்வடைந்து நிகரற்ற பேரின்பம் அநுபவித்தாள். அவ்வாறு அவர்கள் ஐந்து நாட்கள் அன்றில் பறவைகளைப் போல இணைபிரியாதிருந்து, கொஞ்சிக் குலாவி, எத்தகைய பூசலும் கவலையுமின்றி இன்பக் கடலிலாடி சுவர்க்க போகம் அநுபவித்தார்கள். இரவுகளை பேசியே கழித்தனர். பெருந்தேவி முதலியோர் அதனால் மிக்க மகிழ்வடைந்தோர் போலப் பாசாங்கு செய்து அவர்கள் இச்சைப்படி விடுத்து அவர்களுக்கு அநுகூலமாயிருந்து வந்தமையால், அவர்கள் அவ்வைந்து நாட்களிலும் நிகரற்ற இன்பம் அநுபவித்தனர். பெருந்தேவியின் தூண்டுதலினால் அவன் மாலை வேளைகளில் மேனகாவை வண்டியில் வைத்துக் கடற்கரைக்கும், விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடந்த நாடகங்களுக்கும் அழைத்துச் சென்றான். அவர்களுடைய விளையாடல்களை யெல்லாம் கவனிக்காதவர் போலத் தோன்றி ஒவ்வொன்றையும் செவ்வனே கவனித்து வந்த விதவைகள் இருவரும் பொறாமையால் வயிறு வெடிக்க உள்ளூற வருந்தினர். ஆனாலும், தமது சதியாலோசனைக்கு அது அதுகூலமானதென்று நினைத்து அவர்கள் வாளாவிருந்தனர்.
இளையோர் இருவரும் சயன அறையில் தனிமையில் இருக்கையில் விதவைகள் தமக்குள் கண்ணைச் சிமிட்டி உதட்டைப் பிதுக்கி ஏளனமாய்ப் பேசியும், தமது விரலை அறைப்பக்கம் நீட்டிப் பெளரஷம் கூறியுமிருந்து, அவர்கள் மொழிந்த சொற்களை யெல்லாம் உற்றுக் கேட்டு வந்தனர். ஒருவர் மீதொருவருக்குக் காதலும், அன்பும் நிமிஷத்திற்கு நிமிஷம் மலையாய்ப் பெருகியதைக் கண்ட விதவைகளும், சாமாவையரும் தம்முடைய வஞ்சக ஆலோசனையை அதி சீக்கிரத்தில் நிறைவேற்ற உறுதி கொண்டனர். அவர்களுடைய எண்ணம் நிறைவேறுவதற்கு அநுகூலமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.