வலையிற்பட்ட மடவன்னம்
61
பக்கத்திலிருப்பவர்களிடம் வசவும் இடியும் ஏன் பெற வேண்டும். நீங்கள் போங்கள். நான் வரவில்லை - என்று மறுமொழிக் கிடமின்றி உறுதியாகச் சொல்லி விட்டாள். பெருந்தேவியம்மாள் ஐந்து நிமிஷத்திற்குள் அறைகளைப் பூட்டிக் கொண்டு மேனகாவுடன் புறப்பட்டாள். இருவரும் வண்டியின் உட்புறத்தில் உட்கார்ந்தனர். சாமாவையர் வெளியில் வண்டிக்காரனோடு அமர்ந்தார்.
பெரு:- அடே சாமா! வண்டி கடற்கரைப் பாதையின் வழியாகப் போகட்டும் - என்றாள்.
வண்டி அவ்வாறே கடற்கரைப் பக்கமாகத் திரும்பிச் சென்று அங்கிருந்த அழகான சாலையை அடைந்தது. மேனகா தனது ஆசை மணாளனைக் காணப்போகும் நினைவினால் மனவெழுச்சியும் மகிழ்வும் கொண்டிருந்தாள் ஆனாலும் ஒருவித சஞ்சலம் அவளது மனதின் ஒரு மூலையில் தோன்றி அவளை வருத்தியவண்ணம் இருந்தது. அங்கு தோன்றிய கடற்கரையின் அற்புத வனப்பைக் காண, அவளது மனதும், நாட்டமும் அதன்மேற் சென்றன. அந்தப் பாட்டையில் அப்போதைக்கப்போது இரண்டொரு மனிதரையும், யாதாயினுமொரு மோட்டார் வண்டியையுங் கண்டனர். நிலவு பகலைப்போல எங்கும் தவழ்ந்திருந்தது; மிக்க அழகுபடச் சமதூரங்களில் அமைக்கப்பெற்றிருந்த கம்பங்களில் காணப்பட்ட மின்சார விளக்குகளின் வரிசை நிலமகளின் கழுத்தில் அணியப் பெற்ற வைர மாலையைப்போலக் காணப்பட்டது. நிலமகளின் நெற்றித் திலகத்தைப்போலத் தனது மென்மையான சந்திர பிம்பம் பன்னீர் தெளிப்பதைப் போல தனது மென்மையான கிரணங்களால் அமுதத்தை வாரி வீசிக்கொண்டிருந்தது. கடலினில் உண்டான குளிர்காற்று ஜிலு ஜிலென்று வீசி மனிதரைப் பரவசப் படுத்தி ஆனந்தத் தாலாட்டு பாடியது. பாதையின் சுத்தமும் தீபங்களின் வரிசையும், கடற்பரப்பின் கம்பீரமும், மந்தமாருதத்தின் சுகமும், விண்ணில் நாட்டியமாடிய தண்மாமதியத்தின் இனிமையும் ஒன்று கூடி