முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?
101
பங்களாவை யடைந்தார். அவர் மனதில் இரக்கமும், தயாளமும், அநுதாபமும் நிறைந்திருந்தன. அந்த நிலையில் அவர் தமது காலைத் தபால்களை உடைத்துப் பார்த்தார். தபால்களில், சென்னை போலீஸ் கமிஷனரால் அனுப்பப் பட்டிருந்த, சாமாவையர் பெருந்தேவியம்மாள் ஆகிய இருவரது வாக்குமூலமும், தந்தி உத்தரவைப் பெற்றுக் கொண்டதற்குச் சாம்பசிவம் கையெழுத்திட்ட காகிதம் முதலியவை ஒரு உறையில் இருந்தன. துரை அவற்றைப் படித்தார்; அப்போது சாம்பசிவத்தின் மீது அவ்வளவு கோபமும் அருவருப்பும் தோன்றவில்லை. அவர்மீது தாம் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி விடலாமா வென்று நெடுநேரம் எண்ணமிட்டார். ஆனால், தாம் முதல் நாள் இரவிலேயே சென்னை துரைத்தனத்தாருக்கு ஒரு தந்தி அனுப்பி, அதில் டிப்டி கலெக்டர் செய்துள்ள குற்றங்களையும், அதற்காக அவரைத் தாம் வேலையினின்று நீக்கி வைத்திருப்பதையும், விசாரணைகள் தீர்ந்த பின் முடிவான அறிக்கை யொன்றை அனுப்புவதாயும் எழுதி யிருந்தார். ஆகையால், இப்போது பரோபகாரத்தைக் கருதி திடீரென்று நடவடிக்கைகளை நிறுத்தி விட்டால், அது தமக்கே துன்பமாய் முடியுமென்று நினைத்தார். மிகவும் அயோக்கியமான நடத்தையுள்ள சாம்பசிவம், தாம் செய்யும் நன்மையை நினையாமல், தம்மீது திருப்பிப் பாணம் தொடுப்பாரென்றும் கலெக்டர் நினைத்து அஞ்சினார். அவர் குற்றங்களைச் செய்யும் துஷ்ட மனிதரென்பதை கலெக்டர் உறுதியாக நம்பி யிருந்தார். என்றாலும், அவருக்குண்டான பயங்கரமான ஆபத்தை நினைக்க, அவரது விஷயத்தில் பெருங்கருணை தோன்றியது. சாம்பசிவத்தின் பொல்லாத வேளையில், அவர் ரூ.200,300 தம்மிடம் பெற்றுக் கொள்ளுவதாயினும், அதைக் கொடுத்து உதவத் தயாராக இருந்தார். வேறுவிதமான எத்தகைய உதவியையும் செய்ய ஆயத்தமாக இருந்தார். ஆனால்,