102
மேனகா
சென்னை துரைத்தனத்தாருக்கு எழுதிவிட்ட விஷயத்தில் பொய்சொல்லி அதை முற்றிலும் மாற்ற அவர் விரும்ப வில்லை. மாற்றுவதும் தமக்குத் தீங்காய் முடியுமென்று நினைத்தார்; மின்னற்கொடியான தங்கம்மாளின் பொன்னைப் பழித்த மேனியில் உண்டாயிருந்த காயங்கள் யாவும் வாய் திறந்து அவருடன் பேசிக் கெஞ்சி மன்றாடி அவளது கணவனை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்வதைப் போல கலெக்டரது மனதில் தோன்றி அவரை வதைத்தமையால், தாம் அவருக்கு ஏதாகிலும் உதவி செய்ய வேண்டுமென்னும் இரக்கமும் ஒருபுறம் வதைத்தது. அவ்வாறு அன்றைய பகலையும் இரவையும் அவர் சிந்தனை செய்வதிலேயே போக்கி மறுநாள் ஒருவித முடிவுடன் விழித்தெழுந்தார். சாம்பசிவையங்காரோ கொடிய பாவங்களையும், குற்றங்களையும் செய்தவர். அவற்றின் பொருட்டு கடவுள் அவரை அந்தக் கொள்ளை யினால் மிகவும் கடுமையாகத் தண்டித்துவிட்டார். ஒரு மனிதன் அதைவிட அதிகக் கடுமையான தண்டனையை அடைய முடியாது. ஆகையால், தாம் அவரது விஷயத்தில் தம்மாலான கருணையைக் காட்டி உதவி செய்வது அவசியமென்று நினைத்தார். லஞ்சம் வாங்கின கேஸ்கள் ருஜுவாக்கப் பட்டால், அது அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பத்தக்க பெரிய குற்றமாகும். ரஜா இல்லாமல் ஊரை விட்டுப் போனதும், பொய்யான செலவுப் பட்டி தயாரித்ததும், அதன்படி பணம் வாங்கியதும் அவரை வேலையினின்று விலக்கப் போதுமான குற்றங்கள்; ஆகையால், அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பாமல் வேலையிலிருந்து நீக்குவதோடு விட்டுவிடத் தீர்மானித்தார். தவிர, அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டால், அவருடைய மனைவியின் பரிதாபகரமான நிலைமையில் அவளை ஆதரித்துக் காப்பாற்ற மனிதரில்லாது போவதைக் கருதியும், அவரை வேலையினின்று நீக்குவதோடு விட்டு விடத் தீர்மானித்தார். கலெக்டர், துரைத்தனத்தாருக்கு எழுதி அனுப்பிய தந்தியில் சாம்பசிவையங்கார் லஞ்சம்