30
மேனகா
அல்லது நூறுவேலி நிலத்திற்கதிபதியின் பிள்ளைக் காயினும், கொடுக்கவேண்டுமென்பது டம்பாச்சாரியின் நினைவு. ஆனால், அவ்வூர்ப் பெண்டீரான கோடிவிட்டுக் கோமாளி யம்மாளும், நடுவீட்டு நாச்சியாரம்மாளும், அடுத்த வீட்டு அலர்மேலம்மாளும் தாமரைக்குளத்தில் நீராடுகையில், இவ்விஷயங்களைக் குறித்து சந்தேகமறப் பேசிக்கொண்டனர்.
கோமாளி:- ஏனடி நாச்சிக்குட்டி மொச்சக்கொட்டை யகத்துப் பெண்ணும் என்னுடைய பிள்ளை குப்பனும் பார்த்திப வருஷப் பஞ்சத்திலே ஒரே ராத்திரியிலே பிறந்தவர்கள். குப்பனுக்கு இப்போதுதான் ஜாதகம் பார்த்தோம். அவனுக்கு இருபத்துநான்கு வயதாகிறது, இந்த பங்கஜவல்லிக்குப் பதினாலு வயதாமே! என்ன அதிசயமடி! - என்று தனது வலது கையை மோவாயில் மாட்டி வியப்புக்குறி காட்டிக் கூறினாள்.
நாச்சி:- அடி பைத்தியமே! போ; அது இருசியென்பது உனக்குத் தெரியாதா? நூறு வயசானாலும் அது ருதுவாகாது.
அலர்:- அதைப் பார்த்தாலே கடுவன் பூனை மாதிரி பயமாயிருக்கிறதே! அதை எந்தக் கட்டையிலே போவான் தாலிக்கட்டித் தடுமாறி நிற்கப்போறானோ! வண்ணாரச் சுப்பிக்கு அது ஒரு நாள் இடுப்புத் துணியை விழுத்துப் போட்டதாம். அது ஆணுமில்லையாம், பெண்ணுமில்லையாம்; அலியாம் என்றாள்.
இவ்வாறு அவ்வூர் மகளிர் பங்கஜவல்லியைப் பற்றி வம்புகள் பேசிவந்தனர். அந்தப் பெண்ணின் தோற்றமும் அதற்கு ஒத்ததாகவே இருந்தது. அவள் பிறந்ததும் உண்மையில் இருபத்து நான்கு வருஷங்களாயின. அவள் பிரவிடை யாகவுமில்லை. புருஷன் என்ற நினைவையே அது கொள்ளவு மில்லை. அவ்வதந்தி ஊர்முற்றிலும் பரவியது. அவ்வூரார் எவரும் தமது புத்திரற்கு அந்தப் பெண்ணை மணம் புரிவிக்க