17. மொழியும் உரைநடையும்
பொருள் உணர்த்துவது சொல்லின் பயன். சொல் தனிமொழியாய் நின்றும் பயன்தரும்; தொடர் மொழியாய் நின்றும் பயன் தரும். தனிமொழி சமய ஆற்றலால் பொருள் தரும். சமய ஆற்றலாவது, இச் சொல்லால் இப்பொருள் உணரப் பெறுதல் வேண்டும்' என இறைவனாணை பேர்ல் தொன்றுதொட்டு வரும் வழக்கியல் முறைமை. தொடர் மொழி பொருள் உணர வரும்போது, அவாய் நிலை, தகுதி, அண்மைநிலை, என்ற மூன்று வகையாலும் பொருள் உணரச் செய்யும். அவாய் நிலையாவது, பொருளை உணர்த்துவதற்கு வேண்டிய ஒரு சொல்லை அவாவி எதிர்பார்த்து நிற்கும் நிலை. தகுதி என்பது இன்னசொல் இன்னசொல்லோடு தழுவி நின்றால்தான் பொருள்தரும் என்னும் பொருத்தம். அண்மை நிலை என்பது வாக்கியவுணர்ச்சி தோன்றச் சொற்களை இடையீடின்றி நெருக்கமாகக் கூறுதல். -
சொற்கள் தம் ஆற்றல் ஒன்றினாலேயே முழு அளவில் பொருளை உணர்த்தி விடுவதில்லை. உணர்வோனிடத்திலுள்ள உணரும் ஆற்றலும் ஒரு காரணமே. 'உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே - என்றார் ஆசிரியர் தொல்காப்பியர். சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் இடையே சொற் பொருளுணர்ச்சி என்றோர் தொடர்பு இருக்கிறது. அத்தொடர்பை உணர்தற் காரணமே உணர்ச்சி வாயில், இன்ன சொல்லுக்கு இன்ன எல்லையில் இன்ன பொருள் என்னும் வரம்பு அகராதியினாலோ, ஆட்சியினாலோ ஏற்பட்டு நிலைத்துவிடுவதில்லை. வழிவழியாக மக்கள் இனத்தில் வழங்கி உலவிப் பதிந்து பழகிய பழக்கமே பொருளுணர்ச்சி. தலைமுறைதோறும் அந்தப் பொருளுணர்ச்சி ஆற்றுநீர் போல் இடையறாமல் வருகிறது. பொருள் வழக்கற்று, மக்கள் வாய்