பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9. விலங்குகளும் பறவைகளும்

மனிதனுக்கு முன் தோன்றிய விலங்குகள்

உலகம் தோன்றியபோது மனிதனுக்கு முன் தோன்றியவை விலங்குகளே என்பது உயிர்நூற் புலவர் முடிபு. முதலில் தோன்றிய மனிதன் இவ்விலங்குகட்குப் பயந்தே மலைக் குகைகளில் வாழ்ந்து வந்தான்; அவற்றைக் கொல்ல வில்லையும் கற்கருவிகளையும் பயன்படுத்தினான்; தான் வசதியோடு குடிசைகளைக் கட்டி வாழ அவ்விலங்குகளை ஒழிக்க வேண்டியவனானான். அவ்பொழுது அவன் வேட்டையாடலை மேற்கொண்டான்; கொடுமையற்ற விலங்குகளை உணவாகக் கொண்டான்; இங்ஙனம் மனிதன் விலங்குகளை வேட்டையாடியதாற்றான் ‘வேட்டுவன், வேடன்’ என்னும் பெயர்களைப் பெற்றான். அவனே மனித நாகரிக வரலாற்றின் முதற் பகுதிக்கு உரியவன்.

காலத்திற்கேற்ற மாறுபாடு

இவ்வாறு முதல் மனிதன் கண்டு அஞ்சியவிலங்குகள் பல இன்று இல்லை. அவை பல லக்ஷக்கணக்கான ஆயிரக்கணக்கான யாண்டுகட்கு முன்னரே இறந்து விட்டன. அவற்றின் எலும்புக் கூடுகள் மண்ணுள் மறைந்திருந்தன. உயிர்நூல் அறிஞர் அவற்றைச் சோதித்துப் பல அரிய செய்திகளை வெளியிட்டுள்ளனர். சிந்துப் பிரதேச நாகரிக காலத்தில் இருந்த விலங்குகள், சில இன்று இல்லை. அதற்கு முன் இருந்த விலங்குகள், சில சிந்துப் பிரதேச காலத்தில் இல்லை. குழந்தைகளையும் மனிதரையும் தூக்கிச் செல்லும் பெருங் கழுகுகள் இப்பொழுது இல்லை அல்லவா? மிகப் பழைய காலத்தில் அவை இருந்தன என்று உயிர் நூற் புலவர் கூறுகின்றனர். அவை இருந்தன என்பதை இராமாயணம் - பாரதம், பிருஹத் கதை போன்ற பெருநூல்களில் உள்ள செய்திகளும் மெய்ப்பிக்கின்றன. இவை நிற்க, சிந்துப் பிரதேச விலங்குகளைக் காண்போம்.