பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12. வாணிபம்

உள் நாட்டு வாணிபம்

சிந்து வெளி மக்கள் கொண்டிருந்த வாணிபம் உள்நாட்டு வாணிபம், வெளிநாட்டு வாணிபம் என இரண்டாகக் கூறலாம். மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த செம்பு முதலிய கணிப் பொருள்கள் இராஜபுதனம், மத்திய மாகாணம் முதலிய இடங்களிவிருந்தும், மான் கொம்புகள் காஷ்மீரிலிருந்தும், வைரமும் வெள்ளி கலந்த ஈயமும் ஆப்கானிஸ்தானத்திலிருந்தும், ஒருவகை உயர்தரப் பச்சைக்கல் வடபர்மாவிலிருந்தும் அல்லது திபேத்திலிருந்தும், பொன் கோலார், அனந்தப்பூர் என்னும் சென்னை மாகாண இடங்களிலிருந்தும், ஒருவகைப் பச்சைக்கல் மைசூரிலிருந்தும், உயர்தர ‘அமெஸான்’ என்னும் பச்சைக்கல் நீலகிரியிலிருந்தும், சங்கு முத்து முதலியன பாண்டிய நாட்டினின்றும் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுவதால், அப்பண்டைக்காலத்தில் இந்திய உள்நாட்டு வாணிபம் சிறப்புற நடந்து வந்தது என்பதையும், சிந்து வெளி மக்கள் இந்தியா முழுவதையும் சுற்றுப்புற நாடுகளையும் நன்கு அறிந்திருந்தனர் என்பதையும் ஒருவாறு உணரலாம். ஹைதராபாதில் கண்டெடுக்கப்பட்ட சவக்குழிகள் மீதும், திருநெல்வேலிக் கோட்டத்திற் கிடைத்த நாணயங்கள் மீதும், மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த மட்பாண்டங்கள் மீது. காணப்படும் சில குறியீடுகள் போன்றவை காணப்பட்டமை இங்குக் கருதத் தக்கது.[1] இங்ஙனம் ‘தென்னிந்தியாவின் கடற்கரை,கத்தியவார், வடமேற்கு மண்டிலம், சிந்து-பஞ்சாப் மண்டிலங்கள், கங்கைச் சம வெளியின் வடபகுதி, இராஜபுதனம் முதலிய இந்தியப் பகுதிகள் அக் கால நாகரிகத்திற்கு உரியவையாகலாம்'[2] என்று தீக்ஷத் அவர்கள் கூறுதலால், அக்கால உள்நாட்டு வாணிபச்சிறப்பை ஒருவாறு உணரலாம்.


  1. Hyderabad Archaeological Society Journal, 1917, Mysore Archaeological Report, 1935.
  2. ‘Pre-historic Civilization of the Indus Valley, p.18.