பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

மொஹெஞ்சொ - தரோ


கோவில் வழிபாடு

மொஹெஞ்சொ-தரோவில் பெளத்த ஸ்தூபியுள்ள இடத்தின் அடியில் - இன்றளவும் தோண்டிப் பாராத இடத்தில் சிந்து வெளி மக்களின் கோவில் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ‘பல கோவில்கள் அழியும் பொருள்களைக் கொண்டு கட்டப்பெற்றமையால், அழிந்து விட்டிருத்தல் இயல்பு. அவை இன்று இன்மைகொண்டே கோவில்கள் இருந்தில எனக் கூறல் இயலாது’ என்று டாக்டர் மக்கே போன்ற அறிஞர் கருதுகின்றனர். உயரமான கோவில் களைக் கட்டி வாழ்ந்த சுமேரியரோடு வாணிபத் தொடர்பும் பிற பல துறைகளில் தொடர்பும் கொண்டிருந்த சிந்து வெளி மக்கள் கோவில்கள் இன்றி வாழ்ந்தனர் என்பது பொருந்தாக் கூற்றாகும். எனவே, கோவில்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை என்பது அறிஞர் கருத்தாகும்.

சிந்து வெளிச் சமயம் யாது?

சிந்து வெளி மக்கள், (1) தரைப்பெண் வணக்கம் (2) லிங்க-யோனி வணக்கம் (3) சிவ வணக்கம் (4) நந்தி வணக்கம் (5) சூரிய வணக்கம் (6) விலங்கு வணக்கம் (7) பறவை வணக்கம் (8) நாக வணக்கம் (9) மர வணக்கம் (10) ஆற்று வணக்கம் (11) சிறு தெய்வ வணக்கம் (12) விநோத-தெய்வ வணக்கம் (13) கண்ணன் வணக்கம் இவற்றை உடையவர் என்று ஒருவாறு கூறலாம்; மேலும் அவர்கள், (1) சமயத் தொடர்பான தாயித்துக்களையும் முத்திரைகளையும் பதக்கங்களையும் அணிந்து வந்தார்கள், (2) பலியிட்டு வந்தார்கள், (3) பலவகைப் பொருள்களைப் படைத்து வழிபட்டார்கள், (4) கடவுளுக்கு விழாக்களை நடத்தி வந்தார்கள், (5) நேர்த்திக் கடன் செலுத்தி வந்தார்கள், (6) சமயத் தொடர்பாக இசையும் நடனமும் வளர்த்தார்கள், (7) மந்திர மாயங்களில் பழகி இருந்தார்கள், (8) யோகப் பயிற்சியை நன்கு அறிந்திருந்தார்கள் என்பவற்றை ஒருவாறு உணரலாம்.