பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மொஹெஞ்சொ - தரோ


தாமிரபரணி

இந்த யாறும் பொன் கொழிக்கும் பெருமை பெற்றது. இது திருநெல்வேலிக்கோட்டத்திற் பாய்கின்றது. இதனை அடுத்துள்ள மருத நிலங்கள் மிக்க விளைச்சலை நல்குகின்றன. இது பாயும் “திருநெல்வேலிக் கோட்டத்தில் பண்டைப் புகழ்பெற்ற கொற்கை முதலிய பாண்டியர் நகரங்கள் மறைந்து கிடக்கின்றன.

பேரியாறு

இதுமேற்கு மலைத்தொடர்ச்சியில் தோன்றி மேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கின்றது; திருவாங்கூர் நாட்டில் தோன்றிக் கொச்சி நாட்டிற் பாய்கின்றது.

ஆற்று வெளிகளில் பண்டை மக்கள்

இந்தியாவில் உள்ள இந்த யாறுகள் பாயப் பெற்றுள்ள இடங்களிலும் மலை நாடுகளிலும் பழைய கற்கால மனிதரும் புதிய கற்கால மனிதரும் செம்புக்கால மனிதரும் வெண்கலக்கால மனிதரும் இரும்புக்கால மனிதரும் கிராமங்களையும் நகரங்களையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்திருந்தனர் என்பது கூறாமலே விளங்கும். இவர்கள் இங்ஙனம் வாழ்ந்திருந்தனர் என்பதற்குரிய சான்றுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இனி, அச்சான்றுகளை ஒரளவு முறையே காண்போம்.

ஐக்கிய மண்டலத்துப் புதை பொருள்கள்

மொஹெஞ்சொ-தரோவும் ஹரப்பாவும் தோண்டிக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே-சிந்துவெளி நாகரிகம் பரவி இருந்த உண்மை வெளிப்படுவதற்கு முன்னரே-கங்கை ஆற்றுப் பாய்ச்சல் நாடுகளில் செம்பினாலாய வாட்களும், வரலாற்றுக் காலத்துக்கு முன் பயன்படுத்தப்பட்ட கத்திகளும், மனித உருவம்போலச் செய்யப்பட்ட பொருள்களும் கிடைத்துள்ளன. மனித உருவம் போன்ற பொருள் மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த முத்திரைகள் சிலவற்றுள் காணப்படும் மனித உருவம் போன்றே இருந்தன.