பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

ரோஜா இதழ்கள்

அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பின்புறக் கதவை யாரோ விரல் முட்டியால் தட்டுவது போன்ற ஓசை கேட்கிறது.

மைத்ரேயிக்கு நடுக்கமாக இருக்கிறது.

ஆனால் மதுரம் எழுந்து போகிறாள். அடுத்தகணம் கதவு திறக்கும் ஓசையும் மெல்லிய குரலில் மதுரம் கடிந்து கொள்ளும் ஒலியும் கேட்கின்றன.

“நானெங்கே தொலைஞ்சு போயிடுவேன்னு வந்தியா? அப்படியே போனாலும் ஒழிஞ்சு நிம்மதியாப் போவேன். மனுஷனுக்கு ஒரு ரோசம் மானம் இருக்கணும்!”

அவள் சமையலறையில் விளக்குப் போடுகிறாள். சாப்பிடும் கூடத்துக்கு வந்து குளிரலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துச் செல்கையில் மைத்ரேயி படுத்திருக்கிறாள். குளியலறையில் வெளிச்சம் பரவுகிறது. காலைத் தேய்த்துத் தேய்த்துக் கழுவும் ஓசை. காறி உமிழ்ந்துத் தொண்டையை சுத்த மாக்கிக் கொள்ளும் குரல் ஒலிகள். சமையலறையில் பப்படம் நொறுங்க, சாப்பிடும் அரவங்கள்.

“இங்கே இப்ப ஆளில்ல. நீங்க அழகாப் பகல் நேரத்தில வாசல் வழியா வந்துட்டுப் போகக் கூடாதா? எனக்கு கொல்றாப்பல இருக்கு...” மோரை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் ஒலிகளைத் தவிர வேறு மறுமொழி இல்லை.

“காலமே நேத்து அஞ்சுபடி அரிசியையும் கடையில் கொடுத்துட்டு அந்தத் தடியன் பணம் வாங்கிண்டு போயிருக்கான். வடிக்க மணி அரிசி இல்லை. அப்புறம் எப்படியோ சமாளிச்சு மணி செட்டிகிட்டக் கடன் சொல்லிட்டு ஒரு படி புழுங்கலரிசியும் சாமானும் வாங்கிண்டு வந்து ஆக்கி பொழுதை ஓட்டினேன். இப்படி எத்தனை நாளைக்கு என்பாடு அல்லாடணுமோ?”

“அதான் உன் தங்கை சம்பாதிச்சுப் போடறாளே?”

“நாக்கை அலம்புங்கோ! ஏனிப்படிப் பராதி சொல்றேள்? அநாதைன்னா என்னவேணா சொல்றதா?..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/108&oldid=1101966" இலிருந்து மீள்விக்கப்பட்டது