பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

107

“நானா சொல்றேன்? சைகிள்கடை ஏழுமலைதான் ரிப்பன் வாங்கிக் கொடுக்கிறான்; சினிமாவுக்குக் கூட்டிப் போகிறான்!”

“உங்க நாக்கு அழுகணும்னு நான் சொல்லமாட்டேன். ஒரு பொண்ணு கெட்டுப்போகறது அவ்வளவு சுளுவில்லை. பிஞ்சானாக் கூட வெம்பும்; அழுகாது. வெட்டுக்காயம் பண்ணி மூடிவச்சாத் தான் அழுகும். அப்படி உங்க வர்க்கம் வெட்டுக் காயம் பண்ணிட்டு கெட்டுப் போச்சின்னு எரியறாப்பல நீங்கபேசறேள். அவளுக்கு நாதியில்லே; படிப்பும் வரல. அதுக்காகக்கூடப் பிறந்த பிறப்பை அடிச்சு விரட்ட முடியுமா நான்? இந்த மோழைச் சாம்பு, அசடு, ஒரு கரண்டி எடுக்க வக்கில்லாதவன், உழைக்காட்டாலும் வயசுப் பிள்ளை, இவ நாலு ஆளுக்கு உழைச்சுக் கொட்டுவா. ஏதோ இங்கே அங்கேன்னு பிச்சைகேட்டு ஒரு கலியாணம் பண்ணி வைக்கலான்னு பார்த்தால், ஆயிரம் ரூபாய் கையில் வேணும்னு அவம்மா கோணவாயை ஒரு முழம் நீட்டிண்டு கேக்றா. நேத்து அப்பாவுன்னு லாரிக்காரப் பையன் வந்தான். நல்ல உழைப்பாளி. வம்பு தும்புக்குப் போக மாட்டான். இவனுக்குச் சொர்ணத்தை ஏன் கட்டி வைக்கக்கூடாதுன்னு நினைச்சேன். சாதியாவது இன்னொண்ணாவது? எல்லாம் நஞ்சு கந்தலாப் போனப்புறம் அதுக்குப் புடவைன்னு பேரு எதுக்கு?”

“குடு குடு...மீன் குழம்பு வச்சுக் கல்யாண விருந்து பண்ணு . உனக்கு வாய் அதிகமாயிடுத்து!”

“ஆமாம். மானம் மரியாதை இல்லாதவாளுக்கு வேறே என்ன பேசத் தெரியும்?”

சாப்பிட்டுக் கையலம்பும் ஓசை.

மதுரம் ஈயக் கற்சட்டியையும் குழம்புப் பாத்திரத்தையும் குழாயடியில் போடுகிறாள்.

அவள் கதவைச் சாத்தும் ஒலி கேட்கிறது.

ஆனால் மதுரம் பாயில் வந்து படுக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/109&oldid=1101967" இலிருந்து மீள்விக்கப்பட்டது