116
ரோஜா இதழ்கள்
“கேட்டியா? லோகாம்மாவே, உன்னை ஹோம்ல சேர வேண்டாம்னுட்டா...” என்று மென்னகையுடன் மதுரம் அவளிடம் தெரிவிக்கிறாள்.
லோகா திரும்பியவள் சமையலறை வாயிற்படியில் வந்து நிற்கிறாள். மைத்ரேயியை நோக்கி, “உனக்கு ஒரு பண்டிகை பருவம் வந்தால் சமாளிக்க முடியுமா? கணேச சதுர்த்தி வரும்; ஆவணி அவிட்டம் வரும். கொழுக்கட்டை, பாயசம், வடை என்று பண்ணவேண்டிவருமே? தெரியுமா?”
“நானாக முழுசும் பண்ணினதில்லே. சொல்லிக் குடுத்தால் செய்வேன்....”
“சரி, நீ காப்பி குடிச்சிட்டு குளி. குளிச்ச பின்னதான் சமைக்கணும். நான் உனக்குப் புது ஸ்டவ், பிரஷர்குக்கர் இரண்டையும் வைச்சுச் சமைக்கச் சொல்லித்தரேன்..” என்று கூறுகிறாள் லோகா.
நின்றுகொண்டே சமையல் செய்யத் தோதாக உயரமாக இருக்கிறது அந்த அடுப்பு. அந்த மாதிரி எண்ணெய் அடுப்பை மைத்ரேயி அதற்குமுன் பார்த்ததில்லை.
லோகா பர்னரை எடுத்து வெளியில் வைத்துவிட்டு வட்ட வடிவமான திரியைக் கெளுத்துகிறாள். அது பற்றிக் கொண்டதும் பர்னரை வைக்கிறாள். அடர்த்தியாக நீலச் சுடர் வருகிறது. லோகா அழுத்தக்கலனில் நீரைப் பிடித்து வைக்கிறாள்.
“நானும் எல்லாம் பார்த்துக்கறேன். இதெல்லாம் புதிசா லோகாம்மா?”
“ஆமாம். ராஜா போன மாசம் ஜப்பான் போயிட்டு வந்தாரில்லையா? ஸ்டவ் அங்கேந்து வாங்கிண்டு வந்தார். பிரஷர் குக்கர் முன்னமே வாங்கினதுதான். ரொம்ப செளகரியம் நம்மூர் ஸ்டவ்களைப்போல் கரியே பிடிக்கிறதில்லை.”
“அதுவும் பிரஷர் ஸ்டவ்வை வச்சிண்டு அடிச்சு அடிச்சு தோள்பட்டை கழண்டு போயிடும். இதில் பாரு பருப்பும் சாதமும் ஏழு நிமிஷத்தில் ஆயிடும்.”