பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

119

“ராஜா யாரு மாமி?”

“குமாரபுரம் ஜமீன்தார். இவர் பிள்ளை, பெரிய ஜமீன்தாரும் லோகாவின் அப்பாவும் ரொம்ப சிநேகம். அவர் காலம் ஆயிட்டது. இவர் வந்தா இங்கேதான் தங்குவார்; எம் பி. யோ என்னமோ சொல்றாளே, அது. இங்கேயே மந்திரியா வர்ப்போறார்னுகூட முன்ன சொல்லிண்டா.”

“பெரிய இடத்திலே யார் யாரோ வருவா, போவா, என்னென்னமோ நடக்கும். அதெல்லாம் கண்டும் காணாமலும் நம் காரியத்தைக் குறியாப் பாத்துண்டு போகணும். இத நீ முக்கியமாகத் தெரிஞ்சிக்கணும்.”

“சரி மாமி...”

பாலா சாப்பிட்டு விட்டுக் கல்லூரிக்குச் செல்கிறாள். அநுசுயா முந்தைய நாளைய வேலைகளை முடிக்க வருகிறாள்.

மணி பத்தரை.

“தட்டில் சாப்பாடெல்லாம் எடுத்துவை. உப்பு, ஊறுகாய், மோரெல்லாம் நான் கொண்டுவரேன். அவருக்குச் சாதம் போட்டுடலாம்....” என்று பணிக்கிறாள் மதுரம்.

மைத்ரேயி தட்டில் சாப்பாட்டை வைக்கவில்லை. சிறு அடுக்குகளில் சோற்றையும் காய் குழம்பையும் எடுத்துக் கொண்டிருக்கிறாள். வளைவான வராந்தாவில் நுழைந்ததும் மொஸைக்தளம் வியப்பூட்டுகிறது. வராந்தாவில் சாய்ந்து உட்கார வசதியாகப் பிரம்பு நாற்காலிகள் இருக்கின்றன. உள்ளே புத்தக அலமாரி தெரிகிறது. சுவரில் காந்தியடிகள், நேரு, விஜயலட்சுமி, வல்லபாய்படேல் ஆகியோருடன் விவேகானந்தரும் வளைவாக அமைந்த சுவரின் படங்களில் விளங்குகின்றனர். உள் வட்டத்தை ஓர் திரை இரு பகுதிகளாக்குகிறது. ஒரு பாதியில் புத்தக அலமாரி, ஓர் மேசை, இரண்டு நாற்காலிகள் இருக்கின்றன. இன்னொரு பாதி படுக்கையறை என்று நினைக்கிறாள். பின்புறத்து வராந்தா இரு கூறுகளாகப் பிரிந்து, ஒருபுறம் குளியலறையாயும், மறுபுறம் கழிவிடமாகவும் உதவுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/121&oldid=1101996" இலிருந்து மீள்விக்கப்பட்டது