120
ரோஜா இதழ்கள்
நாற்காலியிலமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பவர், அவர்களைக் கண்டதும் திரும்பி உட்காருகிறார்.
ஐம்பது வயசுக்குத்தான் மதிக்கலாம். வழுக்கை மொட்டை உடல் உழைப்பின்றிப் பருத்துக் கிடக்கிறது. பருமனிலும் ஓர் ஒழுங்கு இல்லை. சதை இழிந்து வழிகிறது என்றால் பொருந்தும். வெற்றிலை புகையிலை மெல்லும் வாய். வெளுத்த வேட்டியும் ஒரு மல்ஜுப்பாவும் அணிந்திருக்கிறார். இடக் கையில் பச்சைக்கல் மோதிரம் மின்னுகிறது. கண்கள் கூரிய கழுகின் பார்வையை நினைப்பூட்டுகின்றன.
“அடடே.... இவதான் புதிசா? சமையக்காரியாட்டமே இல்லையே? உம்பேரென்ன?”
கண்ணபிரானின் நினைவு வருகிறது; அம்மணியம்மாளுக்கும் லோகாவுக்கும்.... ஒற்றுமை...? சீ....
‘மைத்ரேயி’ என்று மெல்லிய குரலில் கூறிக்கொண்டே, மேசையை நகர்த்திப் போட்டுத் தட்டை வைக்கிறாள்.
“என்னது? மைதிலியா? ஐயங்காரா?”
“இல்லே ....”
“கல்யாணம்...”
மதுரம் பதில் கூறுகிறாள். “ஆகலே மாமா. கல்யாணமானா எதுக்கு இப்படி வரா? ஒண்ணுமில்லாதவனெல்லாம் நாலைக்கொடு அஞ்சைக் கொடுன்னுனா எங்கே போறது, சொல்லுங்கோ?”
அவர் கை கழுவிக்கொண்டு உண்ண அமருகிறார். மைத்ரேயியே பரிமாறுகிறாள்.
“எல்லாம் இவள்தான் சமைத்தாள். எப்படி இருக்கு?...”
“நீ போகப்போறியா என்ன?”
“பின்ன என்னால இருக்க முடியுமா?”
“கேட்டுக்கோ வீடுகிடந்து நாறுது- இவ சோஷியல் வொர்க் பண்ணப் போறா. இவ பசங்களே இவளை மதிக்கல. இந்த பாலா, ராத்திரி பத்துமணிக்கு சினிமாக்குப் போயிட்டு