பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

ரோஜா இதழ்கள்

ஒரே மகளாக, எல்லா வசதிகளும் இருந்தும் இப்படிக் கூடச் செய்வார்களா என்று மைத்ரேயி எண்ணிப் பார்க்கிறாள்.

பூசை, புனஸ்காரம், ஆசாரம் என்று அவர் பேசியதே அதிகப்படியாக அவளுக்குத் தோன்றியது. “பட்டுத்திரைக்குப் பின்னால் கைகளில்லாத பெண் ஒருத்தி கால்களால் வேலை செய்யக் காண நேர்ந்தாற் போலிருக்கிறது. களிப்பூட்டும் அற்புதக் காட்சி!” என்று மாம்பாக்கத்தில் வந்த சர்க்கஸ் கொட்டகையில் விளம்பரம் செய்திருந்தனர். பட்டுத்திரை தொங்கியது. அது விலகியதும், கைகளில்லாத ஒரு பெண் - அவள் முகத்தில்பால்வடியும் இளமை, கைகளில்லாத கோலம் அவள் நெஞ்சை அமுக்கிப் பிசைந்தது. அவளால் அந்தப் பெண் கால்களால் தேநீர் தயாரித்ததை அற்புதமாக நினைக்க முடியவில்லை. பல இரவுகளில் அந்த அற்புதம், பயங்கரமாக மாறி அவளுடைய கனவுகளில் தோன்றியிருக்கிறது.

“இந்த மதுரத்தம்மா புருசன் இருக்கே, அது ஒரு மோசமான ஆள். அது போய்க் குடிசையில் அந்தாளுக்கு கஞ்சா வாங்கிக் கொடுக்குது. பாவம் அம்மா, வீட்டுக்குள்ளே ஒண்ணும் செய்ய முடியாம பாதிப் பொழுதும் வெளியே போயிடறாங்க...” என்று மேலும் விள்ளுகிறாள் அநுசுயா.

“உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?”

“எனக்கு கோகிலா சொல்லுவாள். நான்தான் இங்கே அடிக்கடி வருவேன். வேறு யாரையும் அம்மாளுக்குப் பிடிக்காது.”

“உனக்கு ஹோம்ல சம்பளமா?..”

“எனக்கு முன்னெல்லாம் ஒண்ணும் கிடையாது. இப்பத் தான் நாலுமாசமா ‘சில்ட்ரன் செக்ஷன்ல’ வேலை செய்யிறேன். மாசம் அறுபது ரூபாய் சம்பளம். நாற்பது ரூபாய் அங்கேயே சாப்பாட்டுக்குக் கொடுத்துடுவேன்.”

“ஓ, என்னைப்போல இருக்கிறவங்க வந்தாவேலை கிடைக்குமா? வேலை செய்து கொண்டு படிக்கலாம்னு ஆசை இருக்கு. அம்மா கிட்டக் கேட்கணும்னு இருக்கேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/134&oldid=1102839" இலிருந்து மீள்விக்கப்பட்டது