பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

133

“ஐயோ, வேணாம். நீ ஏன் அங்கே போகணும்? இப்பக்கூட எனக்கு வேற வழியில்லாததால அங்கே இருக்கிறேன். காலையிலே கேழ்வரகுக் கஞ்சி ஊத்துவாங்க. பகல் நேரத்தில் பாதி நாளும் சோறு பத்தாம போயிடும். பாச்சை விழுந்த ரசத்தை அப்படியே பாச்சையைத் தூக்கி எறிஞ்சிட்டு முத்தம்மா ஊத்துவா. தலைநிறைய ஈறும் பேனுமாப்பிடுங்கும். ஜெயில் புள்ளிகளைப் போல வெளியே போகணும்; வரணும். யாரேனும் பெரிய மனுஷங்க வந்தா வெள்ளையா நல்ல சேலை உடுத்தி எக்சிபிஷன்போல நிக்கணும். ஒரு மெம்பருக்குப் புடிச்சது இன்னொரு மெம்பருக்குப் புடிக்காது. சாந்தா சுந்தரம்னு ஒரு மெம்பர். டீன்னுதான் கூப்பிடுவா. அவ வீட்டில் யாருக்கோ குழந்தை பிறந்ததுன்னு என்னை உதவிக்குக் கூட்டிப் போனா. நான் இங்கே குழந்தைகளைப் பார்க்கிறேனேன்னு குழந்தைக்கு நர்சாயிருக்கத்தான் கூட்டிருக்காங்கன்னு நினைச்சேன். பெட்பான் வச்செடு, துணி துவைச்சுப் போடுன்னு ஏவினாங்க. அதான் போகட்டும்னா சோறு பின்கட்டிலே வச்சுப் போட்டாங்க. நான் மூணுநாளு இருந்ததும் ஓடிவந்து நம்பம்மாகிட்ட அழுதேன். புடிக்கலேன்னா திருட்டுக்குத்தம் சுமத்தக்கூடத் தயங்கமாட்டாங்க. எங்களுக்கு வீடு வாசல் நாதியில்லே. வந்திட்டோம். நீ போய் அங்கே ஏன் விழறே?” என்றெல்லாம் அநுசுயா அவளுக்கு அறிவுறுத்துகிறாள்.

“எனக்குந்தான் வீடு வாசலில்லையே?”

“இருக்குன்னியே? அக்கா, அத்தான் வீட்டில இருந்து நானே படிச்சிருக்கே?”

“அதான் புத்திகெட்டு வீட்டை விட்டு ஓடிப்போயிட்டேனே? அதை எல்லாரிடமும் சொல்லவே எனக்குக் கூச்சமாயிருக்கு. திரும்பி வந்து அவங்க காலில் விழுந்தேன். என்னைச் சேர்த்துக்கல்ல.”

“த்ஸ...த்ஸ... அப்ப பருவதத்தைப் போலா நீ...”

“யாரு பருவதம்?”

“அப்படி ஒரு பொண்ணு ‘ஹோமில்’ இருக்கு. உங்களவங்கதான். ஏழுமாசம் கர்ப்பத்தோட வந்திருக்கு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/135&oldid=1102841" இலிருந்து மீள்விக்கப்பட்டது