பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

ரோஜா இதழ்கள்

“நீ அங்கேதானிருப்பாயா?”

“ஆமாம், காலையிலே பார்க்கலாம். நீ ராசம்மாளோட போ, இப்ப..” என்று கூறிவிட்டு அவள் போகிறாள்.

படியேறியதும் முன்னறை. அங்கே கண்ணாடி அலமாரிகளில் அந்த இல்லத்தில் தயாராகும் சில கைவினைப் பொருள்கள் காட்சிக்காக வைக்கப் பெற்றிருக்கின்றன. வலது கைப்புறம், ‘ஆஃபீஸ்’ என்ற அறிவிப்பைக் காண்கிறாள். முன் பகுதியைக் கடந்தால் வாயிலில் திரை தொங்கும் பெரிய கூடம். கூடத்தில் மங்கலாக ஒரு அரிக்கேன் விளக்கு ஒளிபரப்புகிறது. அந்த ஒளியில் தாறுமாறாகப் பாய்களில் பெண்கள் படுத்திருக்கின்றனர். அலங்கோலமாக வெறும் மார்புக் கச்சும் பாவாடையுமாக ஒருத்தி கண்மண் தெரியாமல் தூங்குகிறாள். இரண்டு பேர் படுக்கையில் உட்கார்ந்திருக்கின்றனர். அவள் உள்ளே நுழைந்ததும் சட்டென்று எழுந்து அவளையே பார்க்கின்றனர் சிலர். ராசம்மா அந்தக் கூடத்தைத்தாண்டி அந்த அகலத்தில் ஒரு நடைபாதைவிட்ட பின் மிகுந்த அகலத்தில் நீளம் சரிபாதியாகக் குறைந்ததோர் அறைக்கு அரிக்கேன் விளக்குடன் வருகிறாள். அந்த அறையில் ஒரு மூலையில் சுவரில் இரண்டு கள்ளிப் பெட்டி ஷெல்ஃப்கள் இருக்கின்றன. அவற்றில் புத்தகங்கள் நோட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. மூலையில் ஒரு தையல் இயந்திரம் இருக்கிறது. துருப்பிடித்த தகரப் பெட்டிகள் இரண்டு, ஒன்றின் மேலொன்றாக இடம் பெற்றிருக்கின்றன. கீழே பாயில் முழங்கால் கவுனும் சட்டையுமாக ஒரு பெண் தூங்குகிறாள். கர்ப்பிணியாகத் தோன்றும் ஒரு பெண் விளக்கொளியைக் கண்டதும் எழுந்து உட்காருகிறாள்.

மாநிறமாக, நெற்றியில் செஞ்சாந்துத் திலகத்துடன் விளங்கும் அவளுக்குப் பின்னல் கருநாகம்போல் பாயில் புரளுகிறது. பரிதாபத்தை விழிகளில் தேக்கிக் கொண்டு காட்சியளிக்கிறாள்.

“மீனாட்சி இங்கே படுக்கலியா இன்னைக்கு ?”

“இல்லே ஆயா, கூடத்திலேதான் படுத்திருக்கா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/144&oldid=1102869" இலிருந்து மீள்விக்கப்பட்டது