பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

ரோஜா இதழ்கள்


“சீ! வாயை அலம்பு! அந்த மாதிரிக் கும்பலில் ஒருத்தி இல்லே நான். நான் உங்களை எல்லாம்விட உயர்ந்தவள், தெரிஞ்சுக்க!” என்று சீறுகிறாள். ஆனால் அத்துடன் அந்தக் கிளர்ச்சி அடங்கவில்லை. குலுங்கக் குலுங்க அழுகை வெடித்து வருகிறது.

அம்மணி அம்மா அவள் கையில் பணத்தைக் கொடுத்து, அவளைக் குடும்பத்தோடு ஒன்றிக்கொள்ள அனுப்பி வைத்த போது, அவளுக்கு இவ்வளவு பெரிய இழப்பாகத் துயரம் பொங்கி வரவில்லை. வீடு திரும்பி வந்த அவளை அத்திம் பேர் நெஞ்சில் ஈரமின்றி வெருட்டியபோது கலங்கினாள்; தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட நினைத்தாள். ஆனால், அதெல்லாம் இப்போது அவளுக்குச் சிறு பிள்ளைத் தனமாகத் தோன்றுகிறது. வீட்டைவிட்டுத் துரத்தப்பட்ட, அபலைப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்க, அநாதை இல்லங்கள் நகரங்களில் இருப்பதைப்பற்றி எத்தனையோ சினிமாக்கதை, பத்திரிக்கைக் கதைகளில் படித்திருக்கிறாள். ஆனால் அப்படி ஓர் இல்லத்தைப்பற்றி, அதில் நுழைந்ததும் தன்னை இன்ன விதமாகத்தான் பாவித்து நடத்துவார்கள் என்பதைப்பற்றி அவளால் கற்பனை சுடச் செய்திருக்க முடியவில்லை.

அவள்மீது தெறித்துவிட்ட துளியை, அவளுடைய பளிங்கான நடத்தையில் சுட்டுக் கறையாக்கிய சம்பவங்களை அவளால் எப்படி அழித்துவிட முடியும்? அந்தத் துளியைத் துடைத்தெறிய முடியாது; கிள்ளி எறிய இயலாது. மதுரம் மாமி எச்சரித்தாள். லோகாவிடம் எனக்கு இந்த விடுதி வேண்டாம் என்று அன்றே சொல்லியிருக்கலாகாதா? அநுசுயாவிடம் அவள் அந்த வீட்டுச் செய்திகளைக் கேட்டறிந்ததால்தான் லோகா உடனடியாக அவளை அங்கே கொண்டு வந்து விட்டுவிட்டாளோ?

துன்பம் என்ற சொல்லைக் கேட்டு, காட்சியையும் பார்த்து, படித்து உணர்ந்து அநுபவிப்பதெல்லாம் வெறும் நிழல்கள். துன்பத்தையே நுகர்வது தனியான துன்பம். அவள் கெட்டுப் போனவர்களின் கும்பலில் ஓர் துளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/146&oldid=1102878" இலிருந்து மீள்விக்கப்பட்டது