பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

ரோஜா இதழ்கள்


சமையல்காரி அப்போதுதான் மைத்ரேயியை உற்றுப் பார்க்கிறாள்.

“பாப்பாரப் பொண்ணு போலிருக்கே, அடிப்பாவி!” என்று கன்னத்தில் கைவைத்துக் கொள்கிறாள்.

“அநுசுயாவுக்கு ரெட்டைப்பிள்ளை. ஒண்ணு கருப்பு; ஒண்ணு சேப்பு, ஒண்ணு நெட்டை, ஒண்ணு குட்டை, ஒண்னு பொண்ணு-ஒண்ணு ஆணு, வேற வேற அப்பா...” என்று மீனாட்சி களுக்கென்று சிரித்துக் கொள்கிறாள்.

“இந்தக் கழுதைகளுக்குப் போது விடிஞ்சா போது போனா இதான் பேச்சு!” என்று அதட்டுகிறாள் முத்தம்மா.

ராசம்மா மைத்ரேயியிடம், “நீ ஆபீஸ் ரூமிலே போயிரு; காப்பி குடிச்சிட்டு. சூபரன்ட் அம்மா வரும்...” என்று கூறுகிறாள்.

“சரி...” என்று தலையாட்டிவிட்டு அவள் நிற்கிறாள்.

“இன்னிக்கு பிரக்ஃபாஸ்ட் என்ன? கேப்பை கஞ்சியா புழுத்தமாக் கூழா?” இது ஒருத்தியின் விசாரணை.

“கூழுதான், இந்தப் புழுத்தமாவு ஸ்டோரில் இன்னமும் மூணு பீப்பாய் இருக்குதாம்...” என்று விவரம் தெரிவிக்கிறாள் முத்தம்மா.

“உவே,” என்று குமட்டலை வெளியிடுகிறாள் பர்வதம்.

அநுசுயாவும் ரஞ்சிதமும் புவனாவும் காபி குடித்த பிறகு குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர்கள் பகுதிக்குச் செல்கின்றனர்.

ரோஸியும் மீனாட்சியும் மைத்ரேயி முதல் நாள் படுத்துக் கொண்டிருந்த அறையில் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க உட்காருகின்றனர்.

அப்போது வாளி நீரும் துடைப்பமுமாக இருவர் வருகின்றனர்.

“எந்திரிங்கடீ! பெரிய படிப்பு படிக்கிறீங்க. தண்ணியடிச்சிட்டு வந்து குடுங்க...” என்று ஒருத்தி மற்றவளின் புத்தகத்தைப் பிடுங்குகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/154&oldid=1102944" இலிருந்து மீள்விக்கப்பட்டது