பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

ரோஜா இதழ்கள்


இந்தச் சேலை எல்லாம் உடுத்தக்கூடாது...” என்று கரும்பல கையில் ஆணிக்கோடு கிழிப்பது போல் விதிக்கிறாள்.

“எஸ் ஸிஸ்டர்...” என்று அவள் காட்டும் இடத்தில் கையெழுத்துச் செய்கிறாள்.

ராசம்மாதான் இவளுக்கு இரண்டு சேலைகள், குவளை, தட்டு, பாய், எல்லாம் எடுத்துக் கொடுக்கிறாள்.

அவற்றைப் பார்க்கையில் மதுரத்தின் சொற்கள் செவி களில் ஒலிக்கின்றன. அந்தப் புடைவையை உடுத்தும்போது, தன் பாரம்பரியத் தொடர்பு, குடிப்பிறப்பின் மேன்மை அவற்றில் படிந்த கறைகள் எல்லாவற்றையுமே களைந்து விட்டு அழுக்கிலும் சகதியிலும் புரண்டவர்கள் பூண்ட உடுப்புக்களை எடுத்துத் தான் அணிந்து கொள்வதாகத் தோன்றுகிறது. இதுவரையிலும் அவளுக்கோர் தனித்தன்மை இருந்தது. அது அழிக்கப் பெறுகிறது. தாமரைக்குளத்து மீனின் ருசியறிந்து சப்புக் கொட்டுபவள், பெரிய மனிதர் வீட்டில் வேலை செய்கையில் தவறிப்போய் தாயாகும் நிலைக்கு வந்தவள், கன்னிமார் மடத்திலிருந்து ஓடிவந்து தொழில் நடத்துபவனின் வலையில் விழுந்த பின் மீட்கப்பெற்றவள், போலீஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பெற்று சிறை வாசம் அனுபவித்து வந்து சேர்ந்தவள், எல்லாருடைய வரிசையிலும், அவள் ஒருத்தி. அன்றாடம் காலையில் அவள் வரிசையில் நின்று, ஆபீஸ்காரி மல்லிகா பி.ஏ. (சோஷியல் சயன்ஸ்) முன்பு பெயர் கூறும் போது அவள் தன் தனித்தன்மையைத் தானே புதைத்து விட்டதற்காக உள்ளுற அழுகிறாள். அந்தக் கட்டுக்களை அறுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்றுகூட மனசு கொந்தளிக்கிறது. ஆனால் கட்டுக்களை அறுத்துக் கொண்டு வெளியே நடுவீதியில் நின்றவர்களுடைய கதைகளல்லவோ இந்தச் சுவர்களுக்குள் மூடிய இரணங்களாக இங்கே தஞ்சமடைந்திருக்கின்றன! இந்த புரையோடும் புண்கள் காய்ந்து ஆறுவதெப்போ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/158&oldid=1103802" இலிருந்து மீள்விக்கப்பட்டது