பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

பாலும் தெளிதேனும் பாகும்பருப்பு மிவை நாலும்
கலந்துனக்கு நான் தருவேன்; கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா...

பங்கஜம் இனிய குரலில் பாடி முடிக்கையில் ராசம்மா சூடத்தைக் கொளுத்திவைத்து ஆரத்தி எடுக்கிறாள். எல்லாப் பெண்களும் பிள்ளையார்த் தெய்வத்தின் முன் கன்னத்திலடித்துக் கொண்டு கை குவித்துத் தோப்புக்கரணம் போடுகின்றனர்; விழுந்து பணிகின்றனர். ஒவ்வொருத்தியும், நீராடி திருநீறும் குங்குமமும் அணிந்திருக்கின்றனர். வள்ளி பிரார்த்தனைக்கூடம் முழுதுமாகக் கோலமிட்டிருக்கிறாள். பரிமளா மாலை தொடுத்திருக்கிறாள். ராசம்மா இளமையிலேயே கணவனை இழந்தவள். பூசை செய்யும் பொறுப்பு எப்போதும் அவளுக்குத்தான். வாயால் எந்நேரமும் பொல பொலத்துக் கொட்டும் சமையற்காரி முத்தம்மாகூட பூசை முடியும் வரையிலும் வாய் திறக்காமல் கரங்குவித்து நிற்கிறாள். பிள்ளையாரப்பனுக்கு முன் ஒரு தவலை நிறைய அரிசியும் பருப்பும் போட்டுப் பொங்கி வைத்திருக்கின்றனர். கடலைச் சுண்டல், வடை, உடைத்த தேங்காய், வாழைப் பழம், பேரிக் காய், நாவற்பழம்; பொரி, வெல்லம் எல்லாம் படைத்திருக்கின்றனர்.

பூசைக்கென்று கிடைக்கும் தொகையில் கச்சிதமாகத் திட்டமிட்டுப் பொருள் வாங்கிய ஏற்பாடுகளும் ராசம்மா தான் செய்திருக்கிறாள். அவள் கீழ்த்தரமாகப் பேசுவதில்லை; தன் பொறுப்பைத் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் தலையிடுவதில்லை. அன்றாடம் பொருள் எடுத்துக் கொடுத்து. மல்லிகாவிடம் கணக்குச் சொல்லி, இல்லத்தை நேரடியாக நிர்வாகம் செய்யும் ராசம்மாளிடம்தான் மைத்ரேயி பேசுகிறாள். வேறு எவரையும் அவள் பொருட்டாக்குவதில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/159&oldid=1103803" இலிருந்து மீள்விக்கப்பட்டது