பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

ரோஜா இதழ்கள்


பூசை முடிந்ததும் அவர்கள் அந்தக் கூட்டத்திலேயே நெருக்கிக்கொண்டு உட்காருகின்றனர். ராசம்மாளும் முத்தம்மாளும் வாழையிலைத் துண்டுகளை அவர்களுக்கு முன் போட்டு பிரசாதத்தைப் பங்கிட்டு வைக்கின்றனர்.

பழத்துண்டுகள், தேங்காய்க் கீற்று, பொங்கல், வடை, என்று எல்லோருக்கும் பரிமாறும்போது, பங்கஜம் ஒளவையார் சினிமாப் பாட்டுக்களை ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு நல்ல இனிமையான குரல். கேட்டுக் கேட்டே எல்லா சினிமாப் பாடல்களையும் அப்படியே பாடுகிறாள். கண்ணுக்கு அழகில்லாத தோற்றமுடையவளாக இருந்தாலும் வாட்டசாட்டமான உடலமைப்புக் கொண்டவள். மதுரைக்குப் பக்கத்துக் கிராமத்திலிருந்து, பட்டணத்துச் சினிமாவில் பாட்டுப்பாட சான்ஸ் வாங்கித் தருவதாகச் சொன்ன நண்பனை நம்பி வந்து, நடுத்தெருவில் நின்றபின் பிழைக்க வழிதெரியாமல் அவலமானவள். ஒரு பொது விடுதியிலிருந்து ‘மீட்க’ப்பெற்று வந்தவள். முறையான பயிற்சி ஏதுமின்றிக் கேள்வி ஞானத்திலேயே அவள் கேட்க மிக இனிமையாகப் பாடுகிறாள். அந்தத் திறமைகொண்டு உலகில் பிழைக்க இயலாதவளாக, சேற்றுக் குட்டையில் விழுந்தபின் இந்த முகம் தெரியாத முச்சந்திக்கு வந்திருக்கிறாள்.

மைத்ரேயி தன் இலையின்முன் வைத்த பண்டங்களைகூடக் கவனிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்கையில் ராசம்மா கத்துகிறாள்.

“ரோசலின் ! ரோஸி ஏ ரோஸி!”

“எங்கே போயிட்டுது அந்தப் புள்ளே போய்க் கூட்டிட்டுவா, வள்ளி...”

“இந்நேரத்தில் அங்கேதானே நின்னிட்டிருந்தா?” மீனாட்சி எழுந்து சென்று அவளைக் கையைப் பிடித்து அழைத்து வருகிறாள்.

“எனக்கு இதெல்லா வேணான்னா ஏன் கம்பெல் பண்ணுறிங்க? உங்க சாமிக்குப் படைச்சதை நான் சாப்பிட்டாப் பாவம்...” என்று மறுக்கிறாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/160&oldid=1103804" இலிருந்து மீள்விக்கப்பட்டது