ராஜம் கிருஷ்ணன்
159
மைத்ரேயிக்கு இது மிகவும் புதுமையாக இருக்கிறது.
“சாமிதானே ரோசி? சாமி எல்லாருக்கும் பொது. உங்க சாமின்னா என்ன, எங்க சாமின்னா என்ன ? சாப்பிடு ரோசி.” என்று இதமாக வற்புறுத்துகிறாள் ராசம்மா.
“அதெப்படி எல்லா சாமியும் ஒண்ணாகும்? எங்க சாமி பாவமே பண்ணாதவர். உங்க சாமி எல்லாம் கல்யாணம் கட்டியும் பாவம் செய்தவங்க...”
“ஆண்டவனே, ஏம்மா இப்படி எல்லாம் பேசுறே? சாமி எங்கானாலும் பாவம் செய்யுமா? இப்படில்லாம் பேசாதே ரோசி. ஆண்டவன் எல்லாருக்கும் பொது. காந்தி சொல்லலியா. ஞானம்மா நேத்து ஞாயித்துக் கிழமைப் பேச்சில்கூட இதெல்லாம் சொல்லலியா? உங்க சாமியையும்தான் கும்பிடறோம். இலையில் வந்து உக்காந்து பிரசாதம் வாங்கிக்க ரோசி.”
“என்னை ஏன் கம்பெல் பண்ணுறீங்க? எனக்கு இதெல்லாம் வேண்டாம்.”
“அப்ப இன்னிக்குச் சாப்பிடாம இருக்கப் போறியா நீ?”
“வேணாமே !”
மைத்ரேயி வியந்து நிற்கிறாள். எல்லாத் தனித்தன்மைகளையும் இந்தச் சேலை, அழித்துவிட்ட பிறகு, மதம் என்ற ஒன்றைப் பற்றிக் கொள்கிறாளே, எதனால்? இவளை ரோஸ்லீன் கிறிஸ்தவ மதப் பெண் என்று இனம் கண்டு கொள்ளுமுன், மீட்பு இல்லத்துப் பெண் என்றல்லவா குறிப்பிடுவார்கள்!
அழிக்கக்கூடாதது அழிந்துபோன பிறகு, அழிக்க வேண்டியதை இன்னம் பற்றிக் கொண்டிருக்கிறாளே!
ராசம்மா தருமசங்கட நிலையில் தவிக்கும்போது, சமையற்காரி முத்தம்மாள் “இன்னா தகராறு இங்கே?” என்று கேட்டுக் கொண்டு வருகிறாள்.
அவளுக்கு அப்போதுதான் விவரம் புரிகிறது.,