பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

ரோஜா இதழ்கள்


ஒரு குறிப்பிட்ட பொருள் எல்லைக்குள் ஞானம்மாளின் பேச்சுக்களை வரம்பு கட்டுவதற்கில்லை. மனித வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளில் உடலைச் சார்ந்தவைகளாக உணவு, உறையுள், குடிநீர், காற்று, உடை என்று கொண்டால், உள்ளத்தைச் சார்ந்து, செம்மையான வாழ்வுக்கு தேவையாக இருப்பது நல்லொழுக்கமே. இந்த நல்லொழுக்கப் பயிற்சிக்கு வேண்டிய நெறிகளைப் பற்றியே அவள் அழகாகப் பேசுகிறாள். அன்பு, அஹிம்சை, உண்மை, எளிமை, அஞ்சாமை, உடல் உழைப்பின் பெருமை, அழுக்காறாமை, கடமை உணர்ந்து சுயநல மறுத்தல் என்றெல்லாம் தொடர்ந்து கூறலாம். இந்த வகுப்புக்கு இல்லத்துப் பெண்கள் அனைவரும் கட்டாயமாக இருக்கவேண்டும் என்பது விதி. சிலசமயங்களில் அநுசுயாவும் சமையல்கார முத்தம்மாவும் கூட வருகிறார்கள். மைத்ரேயிக்குத் தெரிந்த ஒரு சனிக்கிழமை செயற்குழுவினர் கூடும் நாளாக இருந்தது. உறுப்பினர் கூடும் இடம் பிரார்த்தனைக் கூடமல்ல. மாடியில் அதற்கென்று தனியாக ஒரு கூடம் இருக்கிறது. விதவிதமான கொண்டைகளும் பட்டுச் சேலைகளும், பறவையொலிகளைப் போன்ற ஆங்கிலச் சொற்களுமாக உறுப்பினர்கள் வந்து மாடியேறிப் போவார்கள். அந்தச் சனிக்கிழமையன்று அவர்களில் சிலர் கூட்டம் முடிந்த பின் ஞானம்மாளின் வகுப்பில் வந்து அமர்ந்தார்கள். அவர்கள் அங்கே வந்தமர்ந்ததும், அத்தனைப் பெண்களின் கண்களும் அவர்கள் மீதே பதிந்தன. ஏனெனில் கொண்டை மாதிரிகள், சேலைகளின் கவர்ச்சி, ஒப்பனையழகுகள் எல்லாம் வெள்ளைப் புடவைகளையும் அன்றாடம் சிறிது தேங்காயெண்ணெயும் ஒரு மரச் சீப்பையும் தவிர வேறெதற்கும் ஆசைப்பட இயலாத அந்த ஏழைப் பெண்களின் மனங்களைச் சுண்டி இழுக்கக் கூடியவையாக இருந்தன. அத்துடன் அவர்கள் தங்களுக்குள் இடையே கசமுசவென்று பேசவும், சிணுங்கிச் சிரிக்கவும் தொடங்கியவுடன் ஞானம் சரேலென்று வகுப்பை முடித்து விட்டுப் போய்விட்டாள்.

அதற்குப் பிறகு அவள் இடையில் எவரும் வந்து போகக் கூடாது. வகுப்புக்கள் இல்லத்துப் பெண்களுக்கு மட்டுமே என்று ஓர் அறிவிப்பை வாயிலில் எழுதி வைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/166&oldid=1103811" இலிருந்து மீள்விக்கப்பட்டது