பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

165


இந்த அறிவிப்பு செயற்குழுவினருக்கு எட்டி, அவர்கள் அடுத்த கூட்டத்தில் ஞானம்மாளின்மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ததாகவும், ராஜாவும் லோகாவும் அதற்கு உடன்படவில்லை என்றும் இல்லத்துப் பெண்கள் பேசிக் கொண்டார்கள்.

லோகா ஞானம்மாளிடம் பெருமதிப்பு வைத்திருக்கிறாள்.

அவள் சில சனிக்கிழமைகளில் மாலை ஆறு மணியளவில் அலுவலகத்துக்கு வந்து போவதுண்டு.

மைத்ரேயியிடம், “ஞானம்மா இன்று என்ன பேசினார்?” என்று விசாரிக்கிறாள்.

அவளுக்குப் பாலோ, பழச்சாறோ கொண்டு வந்து கொடுக்கச் சொல்கிறாள்.

ஒரு நாள் மண்டபப் படியில் லோகா அவளைச் சந்திக்கிறாள். “இந்தப் பெண்களெல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் எங்களைக் காட்டிலும்” என்று புன்னகை செய்கிறாள். “நீங்கள் செயல்புரிபவர்; நான் வெறும் ப்ளூ பிரின்ட்!” என்று நகைக்கிறாள் ஞானம். “ஒவ்வொருத்தியின் மனமும் கல்லில் அறைபட்டுக் கிழிந்த துணியைப் போல் இருக்குமென்று எனக்குத் தெரியும். அதை முண்டும் முரடுமாகவேனும் ஓட்டுப்போட முடியுமோவென்று ஏதேதோ உளறி விட்டுப்போகிறேன். நீங்கள் விரும்பி ஆசைப்பட்டு இங்கே வந்து உட்காருவதை நான் மறுப்பேனா?”

“இல்லை, நீங்கள் கோடு கிழித்தது ரொம்ப சரி. ஞானம்மா, நாங்கள் எல்லாரும் வேறு உலகில் புரளுபவர்கள். பேச்சுத் திறனும், அறிவுத் திறனும் எதற்கெல்லாமோ பலியாகிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாமல் உடன் செல்பவர்கள்; இந்த உங்கள் உலகம் தூய்மையாகவே இருக்கட்டும். எங்கள் பிரச்சனைகளையும் கல்மிஷங்களையும் சுமந்து கொண்டு இங்கே வந்து பொழுது போக்கும் நோக்கத்துடன் உட்காருவதை நீங்கள் அநுமதிக்காதது ரொம்ப சரி; ராஜா மிகவும் சந்தோஷப்பட்டார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/167&oldid=1103813" இலிருந்து மீள்விக்கப்பட்டது