பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

ரோஜா இதழ்கள்


இந்த உள்ளங்கரைந்த வார்த்தைகளைக் கேட்டு மைத்ரேயி மெய்சிலிர்க்க நின்றாள்.

ஞானம் வந்து போகும் வரையிலும் மைத்ரேயியை ஓர் பரபரப்பு ஆட்கொள்கிறது. சென்ற பிறகோ, அன்றைய வகுப்பில் அவள் பேசிய கருத்துக்களே சிந்தையைக் கிளர்த்துகின்றன. அநேகமாக அவள் பேசி முடித்த பின்னரோ, இடையிலோ, மைத்ரேயி ஏதேனும் ஐயப்பாட்டுக்கு விளக்கம் கேட்கும் வகையில் எழுந்து நிற்கிறாள். அது உண்மையான சந்தேகமே இல்லை. அவளுடன் பேச வேண்டும், தனிப்பட்ட முறையில் அவளை அணுக வேண்டும், அவளைப்பற்றி அறியு முன்தன் வரலாற்றையும் குறைகளையும் அவளிடம் கொட்டி விட வேண்டும் என்ற உந்துதலில் விளையும் செயலே அது.

ஒரு சனிக்கிழமை அவளுக்குப் பகல் பதினோரு மணிக்குத் தான் கணக்கு ஆசிரியை பள்ளியில் வகுப்பு வைத்திருக்கிறாள். வகுப்பு முடிய மூன்று மணியாகி விடுகிறது. அதற்குப் பிறகு வெகுநேரம் பஸ் கிடைக்காமல் காத்திருந்த மைத்ரேயி, ஞானம்மாளின் ஒரு மணி நேரத்தைத் தவறவிடக் கூடாதென்ற பரபரப்புடன் நடந்தே வருகிறாள். மணி மூன்றேமுக்கால்.

பகலுணவு கொள்ளவில்லை என்ற நினைவில்லை. நேராக அவள் புத்தகங்களுடன் பிரார்த்தனை மண்டபத்துக்கு வருகிறாள்.

ஞானம் பேச்சைத் தொடங்கியிருக்கவில்லை. மற்ற பெண்களுடன் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். எல்லோரும் ஒருமித்துச் சிரிக்கும் ஒலி படியேறும்போதே புலனாகிறது. விரைந்து படியேறி அவள் கடைசி வரிசையில் அமரும்போது எல்லோருடைய கவனமும் அவள்மீது படிகிறது.

“இங்கே வாம்மா, மைத்ரேயி!”

“மன்னிக்கணும் மேடம், நேரமாயிட்டது...” என்று தலைகுனிந்து நிற்கிறாள் மைத்ரேயி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/168&oldid=1103814" இலிருந்து மீள்விக்கப்பட்டது