பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

ரோஜா இதழ்கள்

“யாருக்கு பார்ட்டி?” என்று கேட்டுக்கொண்டு தேநீரை அவள் கிண்ணத்தில் வார்க்கிறாள் மைத்ரேயி.

“பட்டுக்குப் பிரமோஷன் வந்திருக்கே. அதுக்கு பார்ட்டியாம். தண்ணியில்லாத பார்ட்டி. நம்ம மணி ஐயரின் குருடாயில் தயாரிப்புக்கள்.”

“அப்படியானால் கொல்லையில் உள்ள புடலங்காயை நாளைக்குப் பறிக்கிறேன்.”

“ஏன்? நீ சாப்பிடவேண்டாமா? புடலங்காயைப் பறித்துச் சமைத்துவை நான் வந்து சாப்பிடுகிறேன்...”

மைத்ரேயிக்கு நாவுக்கு உப்புக்காரத்துடன் நன்றாகச் சமைத்து உண்ணவேண்டும். ஆனால் ஞானமோ,உப்புப் புளிப்புக் காரமில்லாமல் எதையோ சமைத்து வைப்பாள். “நாவை வளர்க்கக் கூடாது. காரசாரம் சாத்வீக உணவல்ல” என்று ஞானம் கூறுவது வழக்கம்.

“நீங்கள் இப்படிச் சாப்பிடுவதனால்தான் சென்ஸார் போர்டு பொறுப்பிலிருந்து இன்றுவரை நேருக்குநேர் பேசத் துணிவின்றி வழவழ குழகுழவென்று இருக்கிறீர்கள்.” என்று விளையாட்டாக மைத்ரேயி மறுமொழியும் கூறுவதுண்டு. இப்போது அவள்மீது லோகாவைப் போல் உரிமை கொண்டாடி, “மைத்ரேயி அப்படி எல்லாம் வரமாட்டாள்!” என்று சொல்ல மாட்டாளா?

அவள் முரளியை மணந்து கொள்ளவேண்டும் என்று அதனாலேயே வற்புறுத்தத் துணியமாட்டாள். ஞானத்தின் இயல்பு மைத்ரேயிக்கு நன்றாகத் தெரியும்.

ஞானம் கூந்தலைச் சீவி முடிந்து முகம் திருத்திக் கொண்டு ஒரு வெள்ளைச் சேலையணிந்து விருந்துக்குச் செல்கிறாள்.

இரவு எட்டேமுக்கால் மணிக்கு ஞானம் திரும்பி வரும் போது மைத்ரேயி கதவையே மூடியிருக்கவில்லை. மடியில் நூலகத்திலிருந்து கொண்டுவந்த புத்தகம் திறந்து இருக்கிறது. காலை இன்னொரு பிரம்பு நாற்காலியில் போட்டுக்கொண்டு யோசனை தான் செய்துகொண்டிருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/280&oldid=1101344" இலிருந்து மீள்விக்கப்பட்டது