302
ரோஜா இதழ்கள்
“புழுங்கலரிசிதானே ? இதுவே இந்த விலையா?”
“கழகம் ஆட்சிக்கு வரட்டும்மா, ரூபாய்க்கு மூணு படி போடுவோம்!”
அரிசிக்கார இளைஞன் உற்சாகமாகப் பதில் கூறுகிறான். “அப்ப மட்டும் எப்படியய்யா போடுவீங்க? அரிசி உடனடியா விளைஞ்சிடுமா ?”
“அரிசி இருக்கம்மா. கொண்டுட்டு வரவிடமாட்டேங்கறாங்க?’
கழகம் ஆட்சிக்கு வந்தால் சொர்க்க வாழ்வென்று மனப்பால் குடிக்கும் மாறுதல்.
மைத்ரேயி கோயில் வாயிலில் பூ வாங்குகிறாள்.
“ஏம்மா, நீ யாருக்கு ஓட்டுப் போடுவே ?”
“அதென்னாமோ, சொல்லிக்கிறாங்க, யாருக்குப் போடச் சொல்றாங்களோ ?” என்று அகன்ற குங்குமப் பொட்டு துலங்க சிரிக்கிறாள் பூக்காரி.
“என்னம்மா? பூ வாங்கறேளா ? நமஸ்காரம்!” என்று குரல் கேட்கிறது. திடுக்கிட்டாற்போல் மைத்ரேயி திரும்பிப் பார்க்கிறாள்.
“ஓ....நமஸ்காரம், செளக்யமா? எங்கே இந்தப் பக்கம்?”
“உங்களைத் தேடிண்டுதான் வரோம்...”
“என்னையா?...” என்று மைத்ரேயி சிரிக்கிறாள்.
“ஆமாம் முடிச்சாச்சா, கடையில் இன்னும் ஏதானும் வாங்கணுமா ?”
“ஒண்ணுமில்லே, என்ன விசேஷம் ?”
“விசேஷம் நிறைய இருக்கு, நீங்க இப்படி காரில் ஏறிக்குங்கோ, சொல்றேன்.”
“மன்னிக்கணும், ஸ்டடீஸ் எனக்கு முக்கியமாப்படுகிறது. அதனால் தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள், சீனிவாசன்...”