பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

ரோஜா இதழ்கள்

மைத்ரேயிக்குக் கண்ணில் இரத்தம் வருகிறது.

“நளினி, உனக்குப் பணம் கொடுக்காமல் நான் ஏமாற்றி விடமாட்டேன். இதுவரையில் வந்துவிட்டாய். உள்ளே வந்து பார்த்து ஏதேனும் யோசனை சொல்லிவிட்டுப்போ...”

நளினி நாசுக்காகச் சேலையைத் தூக்கிக்கொண்டு வருகிறாள். சாக்குப்படுதாவை விலக்குகிறாள் மைத்ரேயி.

மதுரத்தின் முனகல் கேட்கிறது.

உள்ளே அடிவைத்துப் பார்க்கும் நளினி அடங்கிய குரலில் கடவுளைக் கூப்பிடுகிறாள்.

இப்போது மதுரம் மெள்ளக் கண் விழிக்கிறாள். அருகில் நிற்கும் மைத்ரேயியைப் பார்க்கிறாள். கண்கள் கரைகின்றன.

“மாமி, டாக்டர் வந்திருக்கா அழாதீங்கோ, உங்களுக்கு நன்றாயிடும்...ஷ்...அழக்கூடாது...

“பார் நளினி, நெஞ்செல்லாம் புண் என்கிறாள். நாலு மாசமாகச் சாப்பாடு விழுங்க முடியவில்லையாம். நாற்றம் பார்த்தாயா?...

நளினி மருந்துப் பெட்டியைத் திறக்கவில்லை. குழாய் மாலையைப் போட்டுக் கொண்டு முகப்பினால் நெஞ்சைத் தொட்டுப் பார்க்கவில்லை.

முகத்தைச் சுளித்துக்கொண்டு வெளியே வருகிறாள். அவளுக்கு ஒன்றுமே தெரியாதோ என்று மைத்ரேயி நினைக்கையில் நளினி, “இவங்க யார் உனக்கு?” என்று மெல்லிய குரலில் கேட்கிறாள்.

“எனக்கு ரொம்ப நெருங்கியவர். இதற்குமேல் கேட்காதே. எப்படி இருக்கு நளினி ? எத்தனை ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. சீரியஸ் ஒண்ணும் இல்லையே?”

நளினி உறுத்துப் பார்க்கிறாள். “அட அசடு...!” என்ற இகழ்ச்சி தொனிக்கிறது.

“இவங்களை இங்கெல்லாம் வச்சு ட்ரீட் பண்ண முடியாது. நாளைக் காலையில் ஜீ எச்சில் கொண்டு அட்மிட் பண்ணிடு. புவர்ஸோல்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/354&oldid=1101447" இலிருந்து மீள்விக்கப்பட்டது